விஏஓ 5,000 ரூபாய் தொட்டதுமே மாறிய கலர்.. பட்டா கேட்ட விழுப்புரம் விவசாயி எதிர்பார்க்காத அந்த நொடி
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஊழியர் ஒருவர் லஞ்சம் வாங்கிய புகாரில் கையும் களவுமாக சிக்கிய சம்பவம் வருவாய்த் துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை மக்களுக்கான அரசுப் பணிகளைச் செய்வதற்கு லஞ்சம் கோருவது தொடர்கதையாகி வரும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த அதிரடி நடவடிக்கை ஊழல் பேர்வழிகளுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகாவுக்கு உட்பட்ட ஆசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவருக்குச் சொந்தமான நிலம் அதே பகுதியில் உள்ளது.

அந்த நிலத்திற்கான பட்டா மாற்றம் கோரி அவர் நீண்ட நாட்களாக அரசு அலுவலகங்களுக்கு அலைந்து வந்ததாகக் கூறப்படுகிறது. பட்டா மாறுதல் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றாலும், அதனைச் செய்து முடிக்க விக்கிரவாண்டி அருகே உள்ள ஒரு குறிப்பிட்ட VAO என்று சொல்லப்படும் கிராம நிர்வாக அலுவலர் தரப்பில் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.
விஏஓ - கிராம நிர்வாக அலுவலர்
இந்த விவகாரத்தில் ஆசூர் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் சத்யராஜ். ராதாகிருஷ்ணன் தனது நிலப் பட்டாவைத் தனிப் பட்டாவாக மாற்றித் தருமாறு சத்யராஜை அணுகியபோது, அந்தப் பணியைச் செய்து முடிக்க சத்யராஜ் ரூ.5,000 லஞ்சமாக வழங்க வேண்டும் என்று கறாராகக் கேட்டுள்ளார்.
முறையான ஆவணங்கள் இருந்தும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலையில், லஞ்சம் கொடுக்க விரும்பாத ராதாகிருஷ்ணன் இது குறித்து விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாரிடம் விரிவான புகார் அளித்தார்.
ரூ.5000 லஞ்சம் பணம்
புகாரைப் பெற்றுக்கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார், சத்யராஜை கையும் களவுமாகப் பிடிக்கத் திட்டம் தீட்டினார்கள்.. அதன்படி, போலீசாரின் அறிவுறுத்தலின் பேரில் ராதாகிருஷ்ணன் ரசாயனம் தடவிய ரூ.5,000 ரொக்கப் பணத்தை எடுத்துக்கொண்டு கிராம நிர்வாக அலுவலர் சத்யராஜைச் சந்திக்கச் சென்றார். அப்போது, அலுவலகத்தில் வைத்து சத்யராஜ் அந்தப் பணத்தை வாங்கியபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
அவரிடம் நடத்திய சோதனையில், அவர் வாங்கியது லஞ்சப் பணம் என்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து சத்யராஜை போலீசார் முறைப்படி கைது செய்தனர். லஞ்ச ஒழிப்புத் துறையினரின் இந்த அதிரடி வேட்டை அப்பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. கைது செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
அரசு அதிகாரிகளே இப்படியென்றால்?
அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைத் தாண்டி, சாதாரண மக்களிடம் அதிகாரத்தைப் பயன்படுத்திப் பணம் பறிக்கும் இத்தகைய செயல்கள் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கின்றன.
இந்தச் சம்பவம் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மற்ற அரசு அலுவலர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம், மக்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு லஞ்சம் கேட்கப்பட்டால் உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது.......!!












Click it and Unblock the Notifications