“சாதிவாரி கணக்கெடுப்பு பிரச்சனையை அன்புமணி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” – திருமாவளவன்!
விழுப்புரம்: சாதிவாரி கணக்கெடுப்பு என்பது தேசிய பிரச்சனை என்றும், இதனை அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் எனவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
விழுப்புரம் வானூரில் விசிக சார்பில் முகாம் செயலாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றிருந்த திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் பேசியதாது, "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருச்சியில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பேரணி நடைபெற உள்ளது. இது வரும் 31ம் தேதி நடத்தப்படும். தேசிய அளவில் சமூக நல்லிணக்கத்தையும், சகோதரத்துவத்தையும் பாதுகாக்க வேண்டும் என்றும், வெறுப்பு அரசியலை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த பேரணி வரும் மே மாதம் 31ம் தேதி நடைபெறவுள்ளது.
நமது அண்டை நாடான இலங்கையில் ஆட்சி மாற்றம் நடந்த பின்னரும் கூட அங்குள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை. எனவே இதை கண்டித்து மே 18ஆம் தேதி ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்துவோம். காஷ்மீரில் நடந்த படுகொலை மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தை பாதுகாக்காமல் இத்தகைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள முடியாது. பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் இந்தியர்களிடையே மதத்தின் பெயரால் முரண்பாடுகளை கூர்மைப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள்.
சாதிவாரி கணக்கெடுப்பை இந்திய அரசுக்கு கோரிக்கை வைக்க ஏன் அன்புமணி ராமதஸ் தயங்குகிறார்? இந்தியா முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உரிய பிரச்சினை அல்ல. இது தேசிய அளவிலான பிரச்சனை. எல்லா மாநிலங்களிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் இட ஒதுக்கீடு போன்ற நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். இதனை தேசிய பிரச்சினையாக பார்க்காமல், மாநில பிரச்சனையாக பார்க்கிறார்கள். இந்திய மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாமக பேச வேண்டும்" என தெரிவித்தார்.
முன்னதாக புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், "ஒரே நேரத்தில் இரண்டு அணிகளிடம்/கட்சிகளிடம் பேசிக்கொண்டிருக்கிற ராஜ தந்திரம் எங்களுக்கு தெரியாது. நாங்கள் தவெகவுடனும் சரி, பாமகவுடனும் சரி, பாஜகவுடனும் சரி சேர மாட்டோம். அந்த கட்சிகள் இடம் பெறுகிற கூட்டணியிலும் நாங்கள் சேர மாட்டோம். இதனால் என்ன பாதிப்பு ஏற்படும்? இதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. பதவிதான் முக்கியம் என்று நான் நினைத்திருந்தால் என்னால் இப்படி பேச முடியுமா?
புதியதாக கட்சி தொடங்கியுள்ள விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்திருந்தார். ஆனால் நாம் கூட்டணியில் இருக்கிறோம். இந்த விஷயத்தால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இப்படி சிறு விஷயத்தில் கூட்டணி பலவீனமடைந்தால் கூட அது பாஜகவுக்கு சாதகமாகிவிடும் என்பதை உணர்ந்து புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்காமல் தவிர்த்தோம். இதையெல்லாம் முன்கூட்டியே யூகித்து உணர்ந்து அந்த விழாவை புறக்கணித்தவன் திருமாவளவன்.
அந்த விழாவில் விஜய் என்னை பற்றி பேசியிருந்தார். அண்ணன் திருமாவளவன் இன்று வரவில்லை. ஆனால் அவரது மனம் நம்மோடுதான் இருக்கும் என்று கூறியிருந்தார். நான் நினைத்திருந்தால் விஜய் உடன் கூட்டணி அமைக்க கதவு திறந்திருக்கிறது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அந்த கதவை நான் மூடிவிட்டேன். அதுதான் நான். அதுதான் இந்த திருமாவளவன்.
அதுமட்டுமல்ல, பாஜகவுடனான கதவையும் நான் மூடிவிட்டேன். இந்த தேர்தலில் அதிமுக நமக்கு பல தொகுதிகளை தர தயாராக இருக்கிறது. அவ்வளவு ஏன் கூட்டணி ஆட்சிக்கு கூட அக்கட்சி தயாராக இருந்தது. துணை முதல்வர் பதவியை கூட கோரியிருக்கலாம். கூடுதலாக 4 அமைச்சர் பதவியையும் பெற்று தருகிறேன் என பலர் ஆசை காட்டினர். ஆனால் கூட்டணி கதவு மூடப்பட்டுவிட்டது. நீங்கள் நினைக்கும் சராசரி அரசியல்வாதியல்ல இந்த திருமாவளவன். இதனை நான் பல சந்தர்ப்பங்களில் உறுதி செய்திருக்கிறேன். இந்த ஆசைகளால் திருமாவளவனை வீழ்த்த முடியாது" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications