திடீர் என்ட்ரி கொடுத்த விஜய்.. கேரவன்ல யாருங்க? தவெக மாநாடு நடக்கும் இடத்திற்கு சர்ப்ரைஸ் விசிட்!
விழுப்புரம்: விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நாளை விக்கிரவாண்டி அருகே நடைபெறும் நிலையில், இறுதிக்கட்ட ஏற்பாடுகள் புயல் வேகத்தில் நடந்து வருகின்றன. இந்நிலையில், திடீரென தவெக தலைவர் விஜய், மாநாட்டு திடலுக்கு வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி தொடங்கினார். கட்சி தொடங்கியதில் இருந்து உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம், கட்சி கொடி, பாடல் அறிமுகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்த அவர், பிரம்மாண்ட மாநாடு நடத்த திட்டமிட்டார்.தவெக முதல் மாநாடு விரைவில் நடைபெறும் என்றும் அந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் குறித்து விளக்கப்படும் என அறிவித்திருந்தார்,

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை (அக்டோபர் 27) விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் நடைபெறுகிறது. தவெக மாநாடுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் கட்சி தொண்டர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தவெக மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் நாளை போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவதற்கு, பல்வேறு குழுக்களை அமைத்து விஜய் கண்காணித்து வருகிறார். தவெக மாநாடு நுழைவாயிலில் தலைமை செயலகம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது, அதில் இரண்டு யானைகள் இருபுறமும் பிளிரும் வகையில் நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
தவெக மாநாட்டு மேடையின் இடது புறம் அருகே வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், காமராஜர், பெரியார் மற்றும் விஜய் இவர்களின் கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது, வலதுபுறம் தமிழன்னை, சேரர், சோழர், பாண்டியர் மற்றும் விஜய் இவர்களின் 50 அடி கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கு வருபவர்கள் அனைவருக்கும் தேவையான கழிப்பிட வசதி, இருக்கைகளுக்கு அருகே தேவையான அளவுக்கு குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. மாநாட்டு திடல் மற்றும் பார்க்கிங் பகுதியில் அவசர மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது. 150-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், மருத்துவ ஊழியர்கள், உதவியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

இந்நிலையில், மாநாடு ஏற்பாடுகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இறுதிக்கட்ட ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இன்று இரவு, தவெக தலைவர் விஜய், மாநாடு நடைபெற உள்ள திடலில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.
கேரவனில் வந்த விஜய், மாநாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்குப் பின்புறம் உள்ள பகுதியில் கேரவன் ஒன்றில் விஜய், தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.
மாநாட்டுத் திடல், பார்க்கிங் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான சிசிடிவி கேமராக்களில் நேரடியாக பதிவாகும் காட்சிகளை விஜய் ஆய்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், நாளை என்ன பேச வேண்டும் என்பது குறித்தும் விஜய் ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications