திண்டுக்கல் செம பிஸி.. விஜய்யின் மாநாட்டுக்கு எல்லாரும் வந்துடுங்க.. டீக்கடையில் டோக்கன் கிடைச்சதா?
விழுப்புரம்: விஜய் கட்சியின் மாநாடு நடைபெற உள்ளதையடுத்து, தொண்டர்கள் படுபிஸியாக வேலை பார்த்து வருகிறார்கள்.. மாநாட்டின் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாகியிருப்பதுடன், மக்களுக்கு இலவச டீ டோக்கன் வழங்கி மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார்கள் கட்சி நிர்வாகிகள்.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநாடு 27-ந்தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளில் விஜய் ரசிகர்களும், தமிழக வெற்றிக்கழகத்தின் தொண்டர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

கட்சி கொள்கை: இந்த மாநாட்டில் தான் விஜய் தன்னுடைய கட்சியின் கொள்கை குறித்து பேச உள்ளதாக தெரிகிறது. அத்துடன், தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச உள்ளதாகவும் தெரிகிறது. எனவே, பரபரப்பும், எதிர்பார்ப்பும் கூடிவருகிறது..
மாநாட்டிற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. திடலில் தொண்டர்கள் அமர்வதற்கு 75 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது.. மாநாடு திடலினுள் பார்வையாளர்கள் வசதிக்காக 300 மொபைல் கழிவறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன..
கடலூர் மாவட்டம்: மைதானத்தில் தமிழன்னை, சுதந்திரப் போராட்ட தியாகிகள் வேலு நாச்சியார், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சலை அம்மாள் மற்றும் சேரன், சோழன், பாண்டிய மன்னர்கள், அரசியல் தலைவர்கள் காமராஜர், பெரியார் மற்றும் அம்பேத்கர், கட்சித் தலைவர் விஜய் ஆகியோரது கட் அவுட்கள் மேடையின் 2 பக்கமும் வைக்கப்பட்டிருக்கின்றன..
மாநாட்டு வேலைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறாராம் விஜய்.. மாநாட்டு பணிகள் தொடர்பாக சில அறிவுரைகளையும் நிர்வாகிகளுக்கு வழங்கி வருகிறாராம். முக்கியமாக, குடிநீர், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் குறித்து நிர்வாகிகளுடன் விஜய் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அத்துடன், பொதுமக்களுக்கு எந்தவித சிரமமும் இல்லாத அளவிற்கு வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுரை வழங்கியிருக்கிறாராம்.
நேரில் அழைப்பு: இதனிடையே, விஜய் கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களை மாநாட்டுக்கு வரும்படி வேண்டிவிரும்பி கேட்டுக் கொண்டு வருகிறார்கள்.. மாநாடு விழுப்புரத்தில் நடப்பதால், விழுப்புரம் மக்களுக்கு நேரிலேயே சென்று அழைப்பு விடுத்து வருகிறார்கள்..
அதேபோல, திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகள், வாகனங்களில் செல்வோர், கடைவீதி வணிக நிறுவனங்களின் ஊழியர்கள் என அனைவருக்கும் கட்சி நிர்வாகிகள் டோக்கன் வழங்கியிருக்கிறார்கள்.. இங்குள்ள குறிப்பிட்ட டீக்கடையில் டோக்கனுக்கு டீ வழங்கப்படுகிறதாம் .
வீடுதோறும் அழைப்பு: இதுகுறித்து சின்னாளபட்டி நகர செயலாளர் வைரமுத்து சொல்லும்போது, "முதற்கட்டமாக கடைவீதியில் இலவச டீ டோக்கன் வழங்கி மாநாட்டிற்கு அழைக்கும் பணி துவங்கி உள்ளது. மகளிர் அணி நிர்வாகிகளை முன்னிறுத்தி வீடு தோறும் அழைப்பிதழ் வழங்கி மாநாட்டிற்கு அழைக்கும் பணி அடுத்து மேற்கொள்ளப்பட உள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கோவை ரெயில்வே ஸ்டேஷன் முன்புள்ள அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களை கவர்ந்து வருகின்றன.. காரணம, அந்த போஸ்டரில் "மீண்டும் எம்.ஜி.ஆர் வருகிறார், மக்களாட்சி தருகிறார்" என்ற வாசகம் இடம்பிடித்துள்ளது. சுவரொட்டியில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். படமும், விஜய் படமும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications