கள்ளக்குறிச்சியால் தொய்வான விக்கிரவாண்டி.. ஜூலை 1க்கு பின் முகாமிடும் தலைவர்கள்.. ஹாப்பி அண்ணாச்சி
விழுப்புரம்: மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த கையோடு விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது இருந்த போதும் கள்ளக்குறிச்சி விவகாரம், சட்டசபை நிகழ்வு உள்ளிட்டவற்றால் கள்ளக்குறிச்சியில் தொய்வடைந்திருந்த பிரச்சாரம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. ஜூலை ஒன்றாம் தேதிக்கு பிறகு பல முக்கிய தலைவர்கள் அங்கு முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதால் அப்பகுதி வாக்காளர்கள், நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த விக்கிரவாண்டி எம்எல்ஏ புகழேந்தி திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதன் காரணமாக விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.
ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது. இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தார் அதிமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி. இதன் காரணமாக அங்கு மும்முனை போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில் தேர்தலில் களமிறங்கியுள்ள வேட்பாளர்கள் ஏற்கனவே களத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆதரவாக இதுவரை முக்கிய தலைவர்கள் யாரும் களத்தில் இறங்கி பிரசாரம் மேற்கொள்ளவில்லை. இதனால் விக்கிரவாண்டி தேர்தல் களம் சற்றே சுணக்கம் அடைந்துள்ளது.
இதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு.. கடந்த 19ஆம் தேதி கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்கள் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அடுத்த அடுத்த நாட்களில் சாராய பலி எண்ணிக்கை 60ஐயும் கடந்த நிலையில் ஆளும் திமுக அரசு மீது பலத்த விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக அதிமுக, பாஜக, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் திமுக மீது விமர்சனக் கணைகளை தொடுத்தனர்.
அதே நேரத்தில் உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு நிதி உதவி, சிகிச்சை உள்ளிட்டவற்றில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தியது. இதன் காரணமாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலானது உரிய கவனம் பெறவில்லை என்றே கூறலாம். அதற்கு அடுத்ததாக சட்டசபை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் அங்கும் கள்ளக்குறிச்சி விவகாரமே எதிரொலித்தது. இதனால் அதிமுகவினர் சட்டசபையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். இதை அடுத்து அதிமுக உள்ளிட்ட கட்சிகள் அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுத்து இருக்கின்றன.
இந்த நிலையில் தான் விக்கிரவாண்டியில் தேர்தல் நடக்கிறதா என்பதே தெரியாத அளவுக்கு நிலைமை இருக்கிறது. அதே நேரத்தில் வேட்பாளர்கள் உள்ளூர் நிர்வாகிகள் ஆதரவோடு ஆங்காங்கே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் ஜூலை ஒன்றாம் தேதிக்கு பிறகு விக்கிரவாண்டியில் தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணித்து இருக்கும் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளரை ஆதரித்து தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து இந்தியா கூட்டணி தலைவர்களும் அங்கு பல்வேறு கட்டங்களாக பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றனர்.
குறிப்பாக திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், கூட்டணி கட்சித் தலைவர்களும் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கின்றார். இதேபோல பாமக வேட்பாளருக்கு ஆதரவாக ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது. இதே போல நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்கள். இதை அடுத்து இன்னும் இரண்டு நாட்களில் விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications