விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா!
விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா, ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுடன் பேரணியாகச் சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி, கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு ஜூன் 10 ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது.

விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் ஜூலை 10 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை தேர்தல் ஜூலை 10-ல் நடைபெறும் நிலையில் கடந்த ஜூன் 14 முதல் வேட்பு மனுத் தாக்கல் தொடங்கியது. விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் தாக்கல் செய்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர் அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார். அதிமுக, இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. பாஜக கூட்டணியில் பாமக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டு, பாமக வேட்பாளராக பாமக மாநில துணைத் தலைவர் அன்புமணி போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் அன்னியூர் சிவா தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் சென்று விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார் அன்னியூர் சிவா. அவருடன் அமைச்சர் பொன்முடி, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், திமுக மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி ஆகியோர் உடனிருந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுவைத் தாக்கல் செய்வதற்கு ஜூன் 21 ஆம் தேதி கடைசி நாளாகும். மேலும், வேட்புமனுக்கள் மீது 24 ஆம் தேதி பரிசீலனை நடைபெறும் என்றும் வேட்பு மனுக்களை திரும்பப் பெற 26 ஆம் தேதி கடைசி நாள் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாக திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளார். அதேபோல், பாமக வேட்பாளரை ஆதரித்து ராமதாஸ், அன்புமணி மற்றும் கூட்டணி கட்சிகளான பாஜக தலைவர் அண்ணாமலை, ஓபிஎஸ், டிடிவி தினகரன், ஜி.கே.வாசன், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பிரச்சாரம் செய்ய உள்ளனர்.
நாம் தமிழர் கட்சி அபிநயாவை ஆதரித்து ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது தற்போது விவாதங்களை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications