‛‛ஜுன் 1ல் வாய்ப்பு’’.. விக்கிரவாண்டி சட்டசபைக்கு இடைத்தேர்தல் எப்போது? தேர்தல் ஆணையம் தீவிரம்
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ புகழேந்தி கடந்த 6ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில் தான் கடைசி கட்ட லோக்சபா தேர்தலுடன் சேர்ந்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் அமைச்சர் பொன்முடிக்கு மிகவும் நெருக்கமானவார். இந்நிலையில் தான் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். சென்னையில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அதன்பிறகு அவர் அவர் டிஸ்சார்ஜ் ஆனார். கடந்த 5ம் தேதி விழுப்புரம் விக்கிரவாண்டியில் முதல்வர் ஸ்டாலினின் திமுக பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் புகழேந்தி பங்கேற்ற நிலையில் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 6ம் தேதி மரணமடைந்தார்.
இதையடுத்து கடந்த 8 ம் தேதி விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஒரு சட்டசபை தொகுதி காலியானால் அடுத்த 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கு செப்டம்பர் மாதம் வரை தேர்தல் நடத்த நேரம் உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விக்கிரவாண்டி தொகுதிக்கு லோக்சபா தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்துவதில் தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அதாவது கடைசி மற்றும் 7 வது கட்ட லோக்சபா தேர்தல் என்பது ஜுன் 1ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாகன அறிவிப்பை இந்த வாரத்தில் தேர்தல் ஆணையம் வெளியிடுவதற்கான நடவடிக்கையை தொடங்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒருவேளை ஜுன் 1ம் தேதி விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில் அதன் முடிவுகள் ஜுன் 4ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுடன் சேர்த்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications