கள்ளக்குறிச்சியில் ஆக்கிரமிப்புகளை இடித்த கிராம மக்கள்.. அரசு மருத்துவமனை முன்பு அதிரடியாக சம்பவம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு பஸ் நிறுத்தம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இந்த அரசு ஆஸ்பத்திரிக்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியிருக்கிறார்கள். இதனால் அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைத்திருந்தது. அதனை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள்பல முறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் கிராம மக்களே அதிரடியாக கடைகளை இடித்து அகற்றினார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்திருக்கிறது. இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டியுள்ளார்களாம். இதனால் அரசு மருத்துவமனையை ஒட்டியுள்ள அப்பகுதியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தடைபட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது

இந்த ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என்று கிராம மக்கள் சம்பந்தப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்ட அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. இது தொடர்பாக தொடர்ந்து முறையிட்டும், அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் கூறி வந்தனர்.இந்நிலையில் நேற்று காலைகள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டு-சேராப்பட்டு சாலையில் கிராம மக்கள் அதிரடியாக மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோஷமிட்டனர். சிலர் கடப்பாரை உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை இடித்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் சங்கராபுரம் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் கடப்பாரையை கொண்டு கட்டிடத்தை இடித்த கிராம மக்ளையும் தடுத்து நிறுத்தி போலீசார் சமாதானப்படுத்தினார்கள். தொடர்ந்து 10 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications