மீண்டும் மீண்டும்... விழுப்புரத்தில் லாரி மோதியதால் பெரியார் சிலை சேதம்- சாலை மறியலால் பதற்றம்!
விழுப்புரம்: விழுப்புரத்தில் நேற்று இரவு லாரி மோதியதில் தந்தை பெரியார் சிலை உடைந்து சேதமானதால் பதற்றம் ஏற்பட்டது. பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி திமுக, திக உள்ளிட்ட இயக்கங்கள், கட்சிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று இரவு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
Recommended Video
விழுப்புரம் காமராஜர் வீதியில் தந்தை பெரியாரின் சிலை உள்ளது. 39 ஆண்டுகளுக்கு முன் இந்த சிலையை அதிமுக பிரமுகர் தனுசு என்பவர் நிறுவினார். இந்த சிலை சுமார் 6 அடி உயரத்திலும், அதன் பீடம் 4 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டிருந்தது.

விழுப்புரம் பெரியார் சிலை
இந்த சிலைக்கு பெரியாரின் பிறந்த நாள், நினைவு நாளின்போது தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., திராவிடர் கழகத்தினர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருக்கும் தந்தை பெரியாரின் சிலைகளை அவமதிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்ததையடுத்து பெரியாரின் சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. விழுப்புரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கும் இரும்பு கூண்டு போடப்பட்டிருந்தது.

பெரியார் சிலை உடைப்பு
இந்நிலையில் நேற்று இரவு விழுப்புரம் காமராஜர் வீதி வழியாக வந்த கண்டெய்னர் லாரி ஒன்று திடீரென பெரியாரின் சிலை மீது மோதியது. இதில் அந்த சிலை பீடத்துடன் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்தது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் அருகிலுள்ள விழுப்புரம் நகர போலீசார் அங்கு விரைந்து சென்று கண்டெய்னர் லாரி டிரைவரை மடக்கிப்பிடித்தனர். இதனிடையே மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்.

மகாராஷ்டிரா ஓட்டுநர்
இதில் அந்த கண்டெய்னர் லாரியை ஓட்டி வந்த டிரைவர் மகாராஷ்டிராவை சேர்ந்த மச்சீந்திரா தபலி (வயது 52) என்பதும் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திலிருந்து வாகனங்களுக்கு பயன்படுத்தும் டயர்களை ஏற்றிக்கொண்டு புனேவுக்கு அந்த கண்டெய்னர் லாரி புறப்பட்டதும், வழிதவறி விழுப்புரம் காமராஜர் வீதிக்குள் வந்த அந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராதவிதமாக பெரியாரின் சிலை மீது மோதியதில் சிலை சேதம் அடைந்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் கூகுள் மேப்பை பார்த்து வழிகேட்டு வந்ததால் விழுப்புரம் நகருக்குள் குறுகிய சாலையில் தவறான வழியில் உள்ளே நுழைந்து இந்த விபத்து ஏற்பட்டதாக ஓட்டுநர் வாக்குமூலம் அளித்துள்ளார்..

நள்ள்ளிரவில் சாலை மறியல்
இதனிடையே பெரியார் சிலை சேதம் அடைந்த சம்பவம் பற்றிய தகவல் காட்டுத்தீ போல் பரவியது. மேலும் விழுப்புரம் நகர தி.மு.க. செயலாளர் சக்கரை தலைமையில் அக்கட்சியினர் ஏராளமானவர்கள் அங்கு திரண்டு வந்து திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டதை கண்டித்தும், அதனை சேதப்படுத்திய கண்டெய்னர் லாரி டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார், துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் வந்து போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அதனைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. தமிழகத்தில் தந்தை பெரியார் சிலை சேதப்படுத்தப்படும் சம்பவங்கள் தொடருகின்றன. அண்மையில் கோவை வெள்ளலூரில் பெரியார் சிலையை சேதப்படுத்திய இந்து முன்னணியை சேர்ந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications