கள்ளச்சாராயம் விற்றவருக்கும் நிவாரணமா? 'குற்றவாளிகளுக்கும் குடும்பம் இருக்கு'.. ஐ பெரியசாமி பதில்
விழுப்புரம்: கள்ளச்சாராயம் விற்றதாக கைதான அம்மாவாசை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் ரூ.50, 000 நிவாரணம் அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.. இந்நிலையில் "குற்றவாளிகளுக்கும் குடும்பம் உள்ளது" என அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கடந்த 13ம் தேதி இரவு விஷசாராயம் விற்கப்பட்டிருக்கிறது. மலிவு விலையில் விற்கப்பட்ட இந்த விஷச்சாராயத்தை பலர் வாங்கி குடித்துள்ளனர். இவர்களில் பலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திடீரென மயங்கி விழுந்தனர்.

இதேபோல் செங்கல் பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் சித்தாமூர் பகுதியிலும் இதேபோன்று விஷ சாராயம் குடித்தவர்கள் மயங்கி விழுந்தனர்.
இந்த இரு சம்பவங்களிலும் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் .இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணத்தை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதே போல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ரூ.50000 நிவாரணம் முதல்வர் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கள்ளசாராயம் விற்றதாக அம்மாவாசை என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தானும் கள்ளச்சாராயம் சாப்பிட்டதாக மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் அரசின் சார்பில் ரூ.50 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு ஒரு பக்கம் எழுந்துள்ளது. அதே நேரம் விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட நபருக்கே நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளதே என்று அமைச்சர் ஐ பெரியசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஐ பெரியசாம, " அப்படி இல்லைங்க.. ஒரு குடும்பத்துல.. எல்லாம் தவறு செஞ்சவன், அவன் ஏழை, பணக்காரன் அப்படீன்லாம் கணக்கு பார்த்து நிவாரணம் கொடுக்குறது இல்லை. அந்த குடும்பம் நிர்கதியாகிடும்ல.. பணத்தை வைத்து உயிரை மதிப்பிடக்கூடாது. எதுக்குமே ஒரு அளவு கோல் கிடையாது" என்றார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணைந்து கள்ளச்சாராயத்திற்கு எதிராக போராட்டம் நடத்த தயார் என்று அறிவித்திருப்பது குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் ஐ பெரியசாமியிடம் கேள்வி எழுப்பினர்.

அதற்கு அவர் பதில் அளித்து பேசுகையில், கடந்த இரண்டு வருடங்களில் ஒரு முறை கூட கள்ளச்சாராய விற்பனை தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கள்ளச்சாராய விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் காவல் துறையும் இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் நீதி அரசர் போல் முதல்வர் ஸ்டாலின் செயல்படுகிறார். ஒரு சிறு தவறுக்கு கூட முதல்வர் இடம் கொடுக்க மாட்டார். இப்போது அவர்கள் அரசியலுக்காக குறை பேசுகிறார்கள்.
இப்போது நாம் சாலையில் போகிறோம் அப்போது ஒரு வண்டி பிரேக் பிடிக்காமல் விபத்து ஏற்பட்டால், அதற்கு அரசாங்கம் சரியில்லை என்றா நாம் சொல்ல முடியும். அரசியல் காரணங்களுக்காக குறை கூறுகிறார்கள். என்ன குறை கூறுவது என்று பார்த்தார்கள். ஆயிரம் ரூபாய் விவகாரத்தில் இப்படித்தான் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அதையும் முதல்வர் அறிவித்து விட்டார். அதனால இதை வைத்து அரசியல் செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இதை வைத்து அரசியல் செய்ய முடியாது என்றார்.












Click it and Unblock the Notifications