கல்யாணமான மறுநாளே.. மாப்பிள்ளைக்கு மனைவி தந்த ஷாக்.. அதிர்ந்த கணவன்.. விக்கித்து போன விழுப்புரம்
விழுப்புரத்தில் காதல் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
விழுப்புரம்: திருமணம் செய்து கொண்ட 2வது நாளே, காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள வளவனூர் வடக்கு தெருவை சார்ந்தவர் வெற்றிவேல்.. இவர் ஒரு லாரி டிரைவர்.. இவர் தரணி என்ற பெண்ணை 3 வருடமாக காதலித்து வந்துள்ளார்.. தரணியும் இவரை விரும்பினார்.
அதே பகுதியில் பஞ்சாயத்து போர்டு தெருவை சேர்ந்தவர்தான் தரணி.. ஒருகட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் தரணியின் அப்பா குமரவேலுக்கு தெரிந்துவிட்டது..
காதல் ஜோடி
அதனால், தரணிக்கு வேறொருவருடன் அவசர அவசரமாக திருமணம் செய்ய முடிவு செய்தார்.. அதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்... எனவே, தரணி வீட்டை விட்டு வெளியேறினார்... கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பெருமாள் கோவிலில் கடந்த டிசம்பர் 30ம் தேதி அதாவது நேற்று முன்தினம் இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்... மணம் முடித்த கையோடு, அன்றைய தினமே விழுப்புரம் எஸ்.பி ஆபீசில் தஞ்சம் புகுந்தனர்.
திருமணம்
அப்பா குமரவேலுவால், தங்கள் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அதனால் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரி மனு அளித்தனர். இதனை தொடர்ந்து விழுப்புரம் மேற்கு ஸ்டேஷன் போலீசார், பெண்ணின் அப்பா குமரவேலுவிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.. அப்போது தன்னுடைய அப்பாவுடனேயே செல்வதாக தரணி திடீரென போலீசாரிடம் சொல்லிவிட்டார்.. மேலும், காதல் கணவனுடன் செல்ல முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கவும், போலீசாரும், இவர்களை பிரித்து தனித்தனியாக அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தரணி
மறுநாளே, வெற்றிவேலை அம்போவென விட்டுவிட்டு, தன் அப்பாவுடனேயே கிளம்பி சென்றுவிட்டார் தரணி. இப்படி கல்யாணம் செய்த ஒரே நாளில் தன்னைவிட்டு, காதல் மனைவி பெற்றோருடன் சென்றுவிட்டதால் வெற்றிவேல் அதிர்ந்து போனார்.. மனவேதனைக்கு ஆளானார்.. அந்த சமயத்தில் தரணியின் உறவினர்கள் சக்திவேல், ஞானவேல்,குமரவேல் ஆகிய மூவரும் வெற்றிவேலை சந்தித்து பேசியுள்ளனர்.. இனிமேல் தரணியிடம் பேச நினைத்தால் கொலை செய்துவிடுவோம் என்று வெற்றிவேலை மிரட்டி உள்ளனர்..
ஏமாற்றம்
ஏற்கனவே ஏமாற்றத்திலும், அதிர்ச்சியிலும் இருந்த வெற்றிவேல், இந்த கொலை மிரட்டலால் மேலும் வேதனைக்கு ஆளானார்.. நேற்று வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலையும் செய்து கொண்டுள்ளார்... இது தொடர்பாக வளவனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்படவும், அவர்கள் விரைந்து வந்து வெற்றிவேலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோதனை
உடனடியாக விசாரணையும் மேற்கொண்டனர்.. அந்த வீட்டில் சோதனையும் மேற்கொண்டனர்.. அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு வெற்றிவேல் ஒரு கடிதம் எழுதி வைத்திருந்ததையும் கைப்பற்றினர்.. அதில், கல்யாணம் ஆன முதல் நாளே மனைவியை பிரிந்ததால் மனமுடைந்துள்ளேன் என்றும், பெண்ணின் தந்தை மற்றும் தரணியின் உறவினர்கள் சக்திவேல்,ஞானவேல், குமரவேல் ஆகிய மூவரும் மிரட்டியதால்தான், தற்கொலை செய்து கொள்கிறேன்" என்றும் எழுதியிருந்தது கண்டறியப்பட்டது.
பரபரப்பு
காதல் மனைவியை பிரிந்த வேதனையில் வெற்றிவேல் எழுதி வைத்த அந்த கடிதத்தினை கைப்பற்றி போலீசார் தொடர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்... கவுரவக் கொலை செய்து விடுவோம் என மிரட்டல் விடுத்த பெற்றோரிடமிருந்து பாதுகாப்பு கேட்டு விழுப்புரம் எஸ்பியிடம் மனு கொடுத்து இருந்த நிலையில், இளம் பெண் பெற்றோருடன் சென்றதால் காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.