காதலிக்கு 'காதலர் தின பரிசு' கொடுக்க இளைஞர் செய்த காரியம்.. மாட்டிக்கொண்டு தர்மஅடி! நண்பனும் உடந்தை!
காதலிக்கு பரிசு வாங்க பணம் இல்லாததால் ஆடு திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விழுப்புரம் : உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தைக் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், விழுப்புரம் அருகே காதலன் தனது காதலிக்கு காதலர் தின பரிசு வாங்க பணம் வேண்டும் என்பதற்காக ஆடு திருடி மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓ.ஹென்றி எழுதிய ஒரு சிறுகதை உலகப் பிரசித்தம். 'தி கிஃப்ட் ஆஃப் மேகி' எனும் அந்தக் கதையில், காதலன் தனது காதலிக்காக தனது வாட்ச்சை விற்று கூந்தல் க்ளிப்புகளை வாங்கியிருப்பான். காதலி தனது கூந்தலை விற்று காதலனின் வாட்ச்சுக்கு செயின் வாங்கியிருப்பாள். இருவரும் பரிமாறிக்கொண்ட பரிசுகள் அவர்களுக்கு பயன்படாமல் போனாலும், இருவருக்கும் இடையேயான காதலே பிரதானமாக இருக்கும்.
அப்படி, காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் பரிசுகள் காலத்திற்கும் காதலுணவர்வை வெளிக்காட்டக்கூடியவை. அப்படியொரு காதல் பரிசை காதலிக்கு வழங்க நினைத்த காதலன் திருட்டில் ஈடுபட்டு மாட்டிக் கொண்டுள்ளார்.
காதலிக்கு பரிசு வாங்குவதற்காக பல்சர் பைக்கில் சென்று, ஆட்டுக்குட்டியைத் தூக்கிக்கொண்டு திரும்பும்போது மாட்டிக் கொண்ட இளைஞனுக்கும், அவரது நண்பனுக்கும் ஊர் மக்கள் தர்ம அடி கொடுத்துள்ளனர்.

காதலர் தினம்
பிப்ரவரி 14 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, வரும் செவ்வாய்க்கிழமை காதலர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. காதலர் தினத்தையொட்டி, அதற்கு முந்தைய வாரம் முழுக்கவே கொண்டாட்டங்கள் களை கட்டத் தொடங்கிவிடும். காதலர் தினத்தில் காதலன், காதலி ஒருவொருக்கொருவர் அன்புப் பரிசுகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். எப்பாடு பட்டாவது காதல் பரிசளித்து காதலியையோ, காதலனையோ மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று உலக காதலர்கள் விரும்புவார்கள்.

ஆடு திருடிய இளைஞர்கள்
இந்த நிலையில் காதலர் தினத்துக்கு காதலிக்கு பரிசு வாங்குவதற்கு பணம் இல்லாததால் ஆடு திருடனாக மாறிய கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பீரங்கி மேடு மலையரசன் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவரான அரவிந்த் குமார் (20) மற்றும் அவரது நண்பரான கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த மோகன் (20) ஆகியோரை ஆடு திருடியதாக போலீசார் கைது செய்துள்ளனர்.

தர்ம அடி
அப்பகுதியில் உள்ள ரேணுகா என்பவருக்கு சொந்தமான ஆட்டுப்பட்டியில் இருந்து ஆடு ஒன்றினை பல்சர் பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் திருடிக் கொண்டு செல்வதைக் பார்த்து ரேணுகா கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக ஆடு திருடிய இளைஞர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் இருவருக்கும் தர்ம அடி கொடுத்து பின்னர் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

துணையாக நண்பன்
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அரவிந்த்குமார் காதலர் தினத்தை கொண்டாடவும், தனது காதலிக்கு பரிசு வாங்குவதற்கும் பணம் இல்லாததால் ஆடு திருடியதாக தெரிவித்துள்ளனர். ஆடு திருட துணையாக அவரது நண்பர் மோகன் செயல்பட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. மேலும், ஆடு திருடப் பயன்படுத்திய பல்சர் பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்னர்.












Click it and Unblock the Notifications