மொத்தம் 2 மணி நேரம்.. கண் இமைகளை வைத்தே தெறிக்கவிடும் உலக சாதனை! 10 வயது சிறுமி செய்த வாவ் சம்பவம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் சுமார் இரண்டு மணி நேரம் வரை கண்களை இமைக்காமல் இருந்து 10 வயது சிறுமி உலக சாதனையைப் படைத்துள்ளார்.
நமக்கு எல்லாம் சில நொடிகள் கண் சிமிட்டாமல் இருந்தாலே கண்களில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணீர் வந்துவிடும். நாம் என்ன தான் முயன்றாலும் கூட அதிகபட்சம் ஓரிரு நிமிடங்களுக்கு மேல் கண்களைச் சிமிட்டாமல் இருக்கவே முடியாது.

கண்களைச் சிமிட்டுவது என்பது கண்களில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கப் பெரியளவில் உதவும். இதன் காரணமாகவே சில நிமிடங்களுக்கு மேல் நம்மால் கண்களைச் சிமிட்டாமல் இருக்க முடியாது.
10 வயது சிறுமி: ஆனால், இதிலேயே விருதுநகரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உலக சாதனையைப் படைத்துள்ளார். விருதுநகரைச் சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் கண்களைச் சிமிட்டாமல் 2 மணி நேரம் இருந்துள்ளார். இந்த இரண்டு மணி நேரமும் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் ஒரு முறை கூட கண்களை இமைக்கவில்லை. உலக சாதனையைப் படைத்த இந்த மாணவியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகர்மன்ற தலைவியாக உள்ளவர் பவித்ரா ஷியாம்.. இவரது 10 வயது மகள் அனிஷ்கா தான் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அனிஷ்கா அங்குள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படிக்கிறார். இந்த சிறுமிக்கு இயல்பாகவே நீண்ட நேரம் கண் இமைக்காமல் இருக்கும் திறன் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் உலக சாதனையைப் படைக்க விரும்பிய அவர் இதற்காகத் தனியாகப் பயிற்சியும் பெற்றுள்ளார்.
கண்களை இமைக்கவில்லை: பயிற்சியாளர் மூலம் கடந்த 3 மாதங்கள் அதிக நேரம் கண்களை இமைக்காமல் இருக்கப் பயிற்சி பெற்றுள்ளார். இதற்கிடையே நேற்றிரவு ராஜபாளையம் பெரிய சாவடி இந்த சாதனையை முயற்சியை அவர் மேற்கொண்டார். ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனைக்காக அவர் இரண்டு மணி நேரம் கண்களை இமைக்காமல் இருந்தார். முழுமையாக இந்த 2 மணி நேரமும் வீடியோ ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு மணி நேரத்தில் அவர் ஒரு முறை கூட கண்களை இமைக்கவில்லை.
இந்த சாதனை முயற்சியின் போது அந்த சிறுமியின் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. இருப்பினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அனிஷ்கா தனது சாதனை முயற்சியைத் தொடர்ந்தார். முதலில் 1.30 மணி நேரம் அவர் கண்களை இமைக்காமல் இருக்க வேண்டும் எனத் திட்டமிட்டார். இருப்பினும், இறுதியில் அவர் 2 மணி நேரம் வரை கண்களை இமைக்காமல் இருந்து ஆசியன் புக் ஆப் ரெக்கார்டு சாதனை படைத்தார்.
உலகப் பார்வை தினம்: நேற்று உலகப் பார்வை தினம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார். இதையடுத்து அனிஷ்காவை அவரது தோழிகளும் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் பாராட்டினர்.
நேற்றைய தினம் உலகப் பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.. பிறவியிலேயே கண் பார்வை இல்லாதவர்கள், கண் புரை, விபத்து காரணமாகப் பார்வை இழப்போர் கடும் இன்னல்களை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்குக் கண் தானம் மூலம் தீர்வு கிடைக்கும். கண் தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே உலகப் பார்வை தினம் கடைப்பிடிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications