விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து..படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் பலி
விருநகர் அருகே பட்டம்புதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி படுகாயமடைந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விருதுநகர்: பட்டம்புதூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயமடைந்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இன்று காலையில் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய ஆலை உரிமையாளர் ரமேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
விருதுநகர் அருகே கோட்டநத்தத்தில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. நாக்பூர் உரிமம் பெற்ற இந்த ஆலையில் 15க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன. பேன்ஸிரக வெடிகள் தயாரிக்கப்படுகின்றன.

நேற்று காலை வேலைக்கு வந்த தொழிலாளர்கள் பட்டாசுக்கு தேவையான கருத்திரி தயாரிக்கும் பணியை துவக்கினர். அப்போது திரியில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பற்றியது. தீ பிடித்ததில் வெடி விபத்து ஏற்பட்ட 3 அறைகள் தரைமட்டம் ஆகின.
திரி தயாரிப்பு அறையில் இருந்த சேடபட்டியை சேர்ந்த முத்துப்பாண்டி, கட்டனூரை சேர்ந்த கருப்புசாமி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். மற்ற இரண்டு பேர் உயிர் தப்பினர்
இது குறித்து தகவல் அறிந்த விருதுநகர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேரையும் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இருவரும் 2 காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய தவறிய ஆலை உரிமையாளர் ரமேஷ், போர்மேன் சுப்புராஜ் ஆகியோர் மீது வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் ஏராளமான பட்டாசு ஆலைகள் உள்ளன. இங்குள்ள பல ஆலைகளில் அவ்வப்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. தொழிலாளர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications