விபத்து இல்லா பட்டாசு உற்பத்தி.. பயிற்சி அவசியம்.. பட்டாசு ஆலைகளுக்கு விருதுநகர் ஆட்சியர் எச்சரிக்கை
விருதுநகர்: பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தி மையத்தில் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. ஆண்டு முழுவதும் விபத்துகளும் உயிரிழப்புகளும் நேரிட்டு கொண்டுதான் உள்ளன. நித்திய கண்டம் என்ற நிலையில்தான் பட்டாசு தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்கின்றனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு சிவகாசி அருகே செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கோர விபத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததுடன் தலா ரூ.3 லட்சம் நிவாரண உதவி அறிவித்தார். காயமடைந்து சிகிச்சை பெறுவோருக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டது.
இதில் மனித தவறுகளால் ஏற்படும் விபத்துகள் மற்றும் உயிரிழப்பை தடுக்க நன்கு பயிற்சி பெற்ற ஊளழியர்களை பணியமர்த்த பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நிர்ணயித்த காலத்துக்குள் பயிற்சியை முடிக்காமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என சிவகாசி பட்டாசு உற்பத்தி மையத்தில் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு 2-வது முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3ஆம் முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.10,000 தண்ட கட்டணம் செலுத்த வேண்டும் எனவும், 4-ம் முறை கடிதம் எழுதியும் பயிற்சிக்கு வர தவறினால் சம்பந்தப்பட்ட ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயிற்சி முடிக்காத பட்டாசு ஆலை போர்மேன், கண்காணிப்பாளர்களைக் கொண்டு பட்டாசு உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்; பயிற்சிக்கு வரத் தவறினால் பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் எச்சரித்துள்ளார்.












Click it and Unblock the Notifications