நீயா நானாவில் கலங்கிய மாணவன்.. அக்கவுண்ட்டுக்கு போன பணம்! ஓடி உதவிய விஜயின் தவெக.. லிஸ்ட்டை பாருங்க
விருதுநகர்: விஜய் டிவியில் நேற்று ஒளிபரப்பான நீயா - நானா நிகழ்ச்சியில் தனது குடும்ப கஷ்டத்தை சொல்லி கண்கலங்கிய கோவில்பட்டி மாணவனுக்கு உடனடியாக தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உதவி செய்யப்பட்டுள்ளது. மாணவனின் கல்லூரி படிப்பை பார்த்து கொள்வதாகவும், எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்ட தாய்க்கு மெத்தை, வீட்டுக்கு தேவையான ஒரு மாத பலசரக்கு சாமான்கள், ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
விஜய் டிவியில் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமையும் நீயா - நானா நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதனை கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று ‛‛படித்து கொண்டே வேலை பார்க்கும் மாணவர்கள் VS அவர்களின் பெற்றோர்கள் & குடும்பத்தினர்'' என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது.

இதில் ஒருபுறம் பள்ளி, கல்லூரி படித்து கொண்டே வேலை செய்யும் மாணவர்களும், மற்றொருபுறம் அவர்களின் குடும்பத்தினரும் அமர்ந்து இருந்தனர். இதில் ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தாங்கள் செய்யும் வேலைகள் பற்றியும், அதில் உள்ள சிரமங்கள் பற்றியும், தங்களின் குடும்ப சூழல் பற்றியும் எடுத்துரைத்து கண்கலங்க வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ரமேஷ் என்ற மாணவன் பங்கேற்று பேசினார். ‛‛நான் பழக்கடையில் வேலை செய்கிறேன். பழக்கடையில் வெயிட் தூக்கும் வேலை இருக்கும். பழ மூட்டையை தூக்கி சுமப்பேன். நான் தோள்பட்டையில் வைத்து தான் தூக்கி சுமப்பேன். தோள்பட்டையில் வலி அதிகம் இருக்கும். ஆனால் அந்த வலியை வீட்டில் சொல்ல மாட்டேன்'' என்றார்.
அப்போது அந்த மாணவன் ஒரு பக்கமாக சாய்ந்து பேசியிருந்தார். இதனை கவனித்த கோபிநாத், ‛‛ஒருபக்கமாக ஒருகளித்து இருந்தபடியே பேசுகிறீர்களே.. வலி அதிகமாக இருக்குமோ?'' என்று கேட்டார். அதற்கு அந்த மாணவன், ‛‛ஆமா சார்.. வலி அதிகம் இருக்கும். நான் 5.30 மணிக்கு வேலைக்கு செல்வேன். 10 மணி வரை வேலை இருக்கும். 10 மணிக்கு பிறகு பஸ்சை விட்டுவிட்டால் வீட்டுக்கு 3 கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்வேன்'' என்றார்.
அப்போது கோபிநாத், ‛‛வீட்டுக்கு நடந்தே செல்லும்போது என்னவெல்லாம் யோசித்து கொண்டு செல்வீர்கள்?'' என்று கேள்வி கேட்டார். அதற்கு அந்த மாணவன், ‛‛ சார், எங்க அம்மாவை நல்ல இடத்தில் உட்கார வைக்க வேண்டும். வீடு கட்டி உட்கார வைக்க வேண்டும். நான் நன்றாக படித்து நல்ல வேலைக்கு செல்ல வேண்டும். எங்க அப்பா கஷ்டப்படுகிறார். அவருக்கு கொஞ்சம் சப்போர்ட்டாக இருக்க வேண்டும். அந்த மாதிரி ரொம்ப யோசித்து கொண்டே நடந்து போவேன். அப்படியே வீடு வந்துரும் சார்'' என கண்கலங்கினார். அவரை பார்த்து எதிர்புறத்தில் இருந்த மாணவனின் தாயும் கண்கலங்கினார்.
மேலும் மாணவன் கூறுகையில், ‛‛எங்கள் வீட்டில் பெட் இல்லை. அம்மா கீழே தான் படுத்து இருப்பார். அதனை பார்க்கும்போதெல்லாம் என் அம்மாவுக்கு ஒரு பெட் வாங்கி கொடுக்கணும். பெட்டில் அம்மாவை படுக்க வைக்க வேண்டும் என்று நினைப்பேன்'' என்றார். அப்போது மாணவனின் தாய் கண்கலங்கியபடி, ‛‛நான் கஷ்டப்படக்கூடாது என நினைப்பான் சார். நான் முதலில் வேலைக்கு போய் கொண்டிருந்தேன். இப்போது எலும்பு தேய்மானம் இருப்பதால் வேலைக்கு போவது இல்லை. நீ வீட்டில் இரும்மா.. நான் பார்த்து கொள்கிறேன் என சொல்லிக்கொண்டு வேலைக்கு போகிறான் சார்'' என்றார்.
அப்போது கோபிநாத், ‛‛ரொம்ப நல்ல பையன். உங்களின் கஷ்டத்தை போக்க அவன் ரொம்ப கஷ்டப்பட்டுட்டே இருக்கானே'' என மாணவனின் தாயை பார்த்து கேட்டார். அதற்கு மாணவனின் தாய், ‛‛கழுத்தை ஆட்டி கொண்டே இருப்பான் சார். ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காட்டினேன். வேலைக்கு அனுப்பினால் படிப்பில் கவனம் இல்லாமல் போய்விடும் என்று கூறினார்கள். நான் இதுபற்றி சொல்லி பார்த்துவிட்டேன். ஆனால் நான் படித்து கொண்டே உன்னை பார்த்துவிடுவேன் அம்மா எனக்கூறுகிறான்.
அவங்க அப்பா ரொம்ப கஷ்டப்படுகிறார். அவருக்கு உதவ வீட்டு செலவுக்காக வேலை பார்க்க வேண்டும் என செல்கிறேன். 3 மாதம் வேலைக்கு போய் துட்டு சேர்த்து வைத்து எனக்கு கம்மல் எடுத்து கொடுத்து இருக்கிறான் சார். மகன் எடுத்து கொடுத்த கம்மல் என்று எல்லோரிடமும் பெருமையாக சொல்வேன்'' எனக்கூறினார். அதற்கு கோபிநாத், மாணவனை நோக்கி ‛‛வெளிப்படையாகவே பேசுவோம். உங்களின் அன்பு எனக்கு புரியுது. நீங்கள் ரொம்ப பிடிச்சி போய் வேலைக்கு போகிறீர்களா? என்று கேட்டார். அதற்கு ‛‛நல்ல படிக்க வேண்டும் சார்'' என்று மாணவன் பதிலளித்தான்.
இந்த வேளையில், மாணவனின் அம்மாவை நோக்கி கோபிநாத், ‛‛உங்களின் சூழலை புரிந்து கொண்டு வேலைக்கு செல்லும் பையனை இனி வேலைக்கு போகவேண்டாம்'' என சொல்லுங்கள் என்று தெரிவித்தார். அதற்கு அம்மா, ‛‛ரமேஷ் இனி கடைக்கு வேலைக்கு போகவேண்டாம். படிச்சி முடித்த பிறகு வேலையை பார்த்து கொள்ளலாம்'' என்று தெரிவிக்க மாணவன், ‛‛சரி அம்மா'' எனக்கூறி சிரித்தார்.
இதுபற்றி அறிந்தவுடன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உடனடியாக அவரது குடும்பத்துக்கு உதவி செய்துள்ளது. எலும்பு தேய்மானத்தால் பாதிக்கப்பட்ட தாய்க்கு மெத்தை வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, மாணவரின் கல்லூரி படிப்பை பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி வங்கி கணக்கில் ரூ.25 ஆயிரம் போடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாணவனின் தாய் கூறுகையில், "விஜய் டிவி நீயா நானாவில் நிகழ்ச்சிக்கு போய் இருந்தோம். என் மகன் படித்து கொண்டே வேலை செய்கிறான். இதுதொடர்பாக நீயா நானாவில் பேசினான். இந்த நிகழ்ச்சி இன்று (அதாவது நேற்று) தான் ஒளிபரப்பானது.அதனை பார்த்தவுடன் விஜய் உடனடியாக உடனடியாக உதவி செய்துள்ளார். நிகழ்ச்சியை பார்த்த அரை மணிநேரத்தில் விஜய்யின் செயலாளர் ஆனந்த் (புஸ்ஸி ஆனந்த்) கோவில்பட்டியில் உள்ள சுரேஷ் சத்தியாவிடம் பார்த்து எங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்துள்ளனர்.
எனக்கு உடல்நிலை சரியில்லை என்று என் மகன் டிவியில் பேசினான். எனக்கு எலும்பு தேய்மானம் உள்ளது. அதனை கவனமாக பார்த்து உடனடியாக மெத்தை வாங்கி கொடுத்துள்ளனர். வீட்டுக்கு தேவையான ஒரு மாதத்துக்கான பலசரக்கு சாமான்கள் வாங்கி தந்துள்ளனர். என் மகன் 3 ஆண்டு கல்லூரி படிப்பை நாங்களே பார்த்து கொள்கிறோம் என சப்போர்ட்டாக கூறியுள்ளனர். அக்கவுண்ட்டில் ரூ.25 ஆயிரம் போட்டு உள்ளனர்.
விஜய் அண்ணாவுக்கு நன்றி.. ரொம்ப ரொம்ப நன்றி. என் மகன் பேசியதை அவர்கள் பார்ப்பார்கள். விஜய் பார்ப்பார் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. அவர்கள் பார்த்து இவ்வளவு பெரிய உதவியை உடனடியாக செய்துள்ளதற்கு எப்படி நன்றி சொல்வேன் என்று தெரியவில்லை. ரொம்ப ரொம்ப நன்றி விஜய் சாருக்கு'' என ஆனந்தமாக கூறினார்.












Click it and Unblock the Notifications