பாஜகவுக்கு 130 தாங்க.... லோக்சபா தேர்தல் வெற்றியை கணிக்கும் வைகோ
ஸ்ரீவில்லிப்புத்தூர்: வரும் லோக்சபா தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் 130 இடங்களில் வெற்றி பெறும், அது என்னுடைய கணிப்பு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட மதிமுக சார்பில் பல வளர்ச்சி நிதி மற்றும் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நான்கரை ஆண்டுகளில் செய்யாத திட்டத்தை இனி வரும் காலங்களில் செய்யப் போவதாக பட்ஜெட்டில் பாஜக அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு மாதம் 500 ரூபாய் என்ற வீதத்தில் ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் தருவேன் என்று அறிவிப்பு விவசாயிகளை கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளது.
அதிகரித்த வேலையில்லா திண்டாட்டம்
வேலையில்லாத் திண்டாட்டம் எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு 6.1% உயர்ந்துள்ளது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் எல்லா மாநிலங்களிலும் புகுத்தி இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையை பாஜக அழித்து விட்டது.
மதக்கலவரம் மூலம் வெற்றி
மகாத்மா காந்தி கொல்லப்பட்ட தினத்தை கொண்டாட்ட நாளாக அறிவித்து உத்தரபிரதேசத்தில் இந்து மகாசபை தலைவர் பொம்மை துப்பாக்கி வைத்து சுட்ட கொடுமை எந்த ஆட்சியிலும் நடைபெறாத ஒரு நிகழ்வு.அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள மதக்கலவரத்தை உருவாக்கி வெற்றி பெற்றுவிடலாம் என்ற பாஜகவின் கனவு நிறைவேறாது.
130 தொகுதிகள்
நாடு முழுவதும் உள்ள மாநிலக் கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து காங்கிரஸ் வரும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். மத்தியில் கூட்டாட்சி தத்துவம் வெற்றி பெறும். வரும் தேர்தலில் பாஜக இந்தியா முழுவதும் 130 இடங்களில் வெற்றி பெறும் அது என்னுடைய கணிப்பு.
ஸ்டெர்லைட்டில் மேல்முறையீடு
ஸ்டெர்லைட் வழக்கில் 2013-ம் ஆண்டு தமிழக அரசுடன் சேர்ந்து மேல்முறையீடு செய்துள்ளேன். மத்திய பட்ஜெட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப் படும் என்று அறிவிப்பால் தமிழகத்தில் பாஜக அணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது இது நிறைவேற்றப்பட்டால் 19 மாவட்டங்கள் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கும்.
கேபிள் கட்டணம் உயர்வு
காவிரி தீரம் முழுவதும் உள்ள நிலங்கள் விற்பனை செய்யப்படும் நிலை ஏற்படும். அரசு கேபிள் கட்டணங்கள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது கண்டிக்கத் தக்கது என்று வைகோ கூறினார்.