“அப்பான்னு சொன்னதுமே அந்த ஸ்மைல்”.. மாணவி பேச்சைக் கேட்டு அப்படியே பூரித்துப்போன முதல்வர் ஸ்டாலின்!
விருதுநகர்: தமிழக முதல்வர் ஸ்டாலின், விருதுநகர் மாவட்டத்திற்கு சென்றுள்ள நிலையில் அங்கு அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மாணவி ஒருவர் உற்சாகமாகப் பேசியதைப் பார்த்து, பூரித்துப்போயிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணமாக விருதுநகர் மாவட்டத்திற்குச் சென்றுள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று விருதுநகர் வந்த முதல்வர் ஸ்டாலினுக்கு, விருதுநகர் வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக சார்பில், விருதுநகர் மாவட்ட எல்லையான சத்திரரெட்டியபட்டியில் திமுகவினர் 3 கி.மீ தூரத்துக்கு அணிவகுத்து நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பட்டாசு ஆலையில் ஆய்வு: ஆரவார வரவேற்பால் உற்சாகமடைந்த முதல்வர் ஸ்டாலின் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்று, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், விருதுநகரில் உள்ள மதன் ஃபயர் வொர்க்ஸ் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, தொழிற்சாலை பெற்றுள்ள உரிமச் சான்றினை ஆய்வு செய்து, அங்கு பட்டாசுகள் தயாரிப்பதற்கான ரசாயனப் பொருட்கள் வைக்கப்படும் அறை, பட்டாசு தயாரிக்கப்படும் இடங்கள், பட்டாசுகள் வைப்பறை, மைக்ரோ கார்டு திரி வைப்பறை போன்ற இடங்களை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார் முதல்வர் ஸ்டாலின். சுமார் 80 பேர் பணிபுரியும் இந்த தொழிற்சாலையில், 36 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்கிறதா எனக் கேட்டறிந்தார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும், பட்டாசு நிறுவன உரிமையாளரிடம், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்புக்கான முறையான காப்பீடு வசதியினை செய்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தியதோடு, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார். பின்னர், அப்பகுதியில் திரளாக கூடியிருந்த பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
காப்பகத்திற்கு சென்ற ஸ்டாலின்: அதைத்தொடர்ந்து, விருதுநகர் சூலக்கரை பகுதியில் உள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். காப்பகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடி, அவர்களிடம் பள்ளி மற்றும் காப்பகத்தில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், குறைகள் குறித்தும் கேட்டறிந்தார். மேலும், மாணவிகளுக்கு பரிசுகள், இனிப்புகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்.

அப்போது மாணவி ஒருவர் பேசுகையில், "முதல்வரை பார்க்க வேண்டும் என்று எல்லோரும் ரொம்ப ஆசைப்படுவோம். அது வெறும் ஆசையாகவே போய்விடும் என நினைத்திருந்தோம். ஆனால் அவர் பக்கத்திலேயே இப்போது நிற்கிறேன் எனும்போது சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. அவரது குழந்தைகளைப் போல, நம்மை பார்க்க வரும்போது ஸ்வீட் வாங்கி வந்திருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை வார்த்தையால் விளக்க முடியவில்லை.
அந்த ஸ்மைல்.. முதலமைச்சர் எங்களைப் பார்க்க வந்த நிலையில், "அப்பா" என்று சொன்னதுமே அந்த ஸ்மைல்.. என மிகுந்த மகிழ்ச்சியோடு உணர்ச்சி பொங்கப் பேசினார் அந்த மாணவி. மாணவி உற்சாகமாகப் பேசியதைக் கேட்டு முதல்வர் ஸ்டாலின் பூரிப்படைந்தார்.
விருதுநகரில் புதிய ஆட்சியர் அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நாளை கலந்து கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின். விருதுநகரில் இன்று ரோடு ஷோ நடத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். விருதுநகர் புதிய பேருந்து நிலையம் முதல் அல்லம்பட்டி வரை ரோடு ஷோ செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.












Click it and Unblock the Notifications