வெறும் வாயில் வடை சுடாதீங்க.. அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் இறங்கி பார்க்கட்டும்! காங் எம்பி சவால்!
விருதுநகர் : உண்மையில் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால், ஈரோடு கிழக்கு தேர்தலில் தனித்தோ, கூட்டணியாக எல்லா கட்சிகளையும் சேர்த்துக்கொண்டோ நிற்கட்டும் என சவால் விடுத்துள்ளார் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர்.
ஈரோடு கிழக்கு தொகு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதிமுக கூட்டணி சார்பில், ஈபிஎஸ், ஓபிஎஸ் இரு அணிகளும் களமிறங்குகின்றன. பாஜகவின் நிலைப்பாடு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அண்ணாமலைக்கு பதில்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றிப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் தண்ணி போல் பணத்தைச் செலவிடுவார்கள், அமைச்சர்கள் அனைவரும் இறங்கி இருக்கிறார்கள் என்று கூறியிருந்தார். இந்நிலையில், விருதுநகரில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "தமிழ்நாட்டில் எப்போது இடைத்தேர்தல் நடைபெற்றாலும் அனைத்து அமைச்சர்களும் பணியாற்றுவது வழக்கம். அது திமுக ஆட்சியாக இருந்தாலும் சரி, அதிமுக ஆட்சியாக இருந்தாலும் சரி.

வாயில் வடை
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையை பொறுத்தவரை வெறும் வாயில் வடை சுடுகிறவர். அண்ணாமலைக்கு உண்மையில் தைரியம் இருந்தால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணியாகவோ, தனித்தோ போட்டியிட்டும். விளையாட்டுப் போக்கில் பிளைட் கதவை திறக்கும் பழக்கம் என சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு விளையாடக் கூடியவர் அண்ணாமலை.

மிகப்பெரிய வெற்றியைப் பெறுவோம்
ஈரோடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவனை அறிவித்து இருப்பது நல்ல முடிவு. இந்த தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெறும். இந்த வெற்றியை, இடைத்தேர்தலில் கிடைக்கும் வாக்குகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆட்சியின் செயல்பாட்டுக்கு கிடைக்கும் வாக்குகளாகப் பார்க்கிறோம்.

இரட்டை வேடம்
பாஜக, ஆர்எஸ்எஸ் தொடர்ந்து இரட்டை வேடம் போட்டு வருகிறது. மத்திய பாஜக அரசின் இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பது மத்திய அரசின் கடைசி பட்ஜெட்டாக இருக்கும் என்றார். வரும் பட்ஜெட்டிலாவது ஏமாற்றாமல் திட்டங்களுக்கான உரிய நிதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கொடுக்க வேண்டும்.

பாஜக அலுவலகம்
டெல்லியில் கட்டப்பட்டு வரும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பாஜகவின் அம்சங்களை புகுத்துவது போல் உள்ளது. நாடாளுமன்ற கட்டிடம் பாஜவின் அலுவலகமாக இருக்கக்கூடாது. மக்களின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்க வேண்டும். நாடாளுமன்ற கட்டுமானத்தை, எதிர்க்கட்சி தலைவர்களை அழைத்து சென்று காட்டவில்லை. பிரதமர் மட்டும் ஒற்றையாகப் போய் பார்த்து வருகிறார். என்ன மர்மம் இருக்கிறது என தெரியவில்லை என்றார்.

ராகுல் வழியில் பாஜக
மேலும், ராகுல் காந்தி நடைபயணத்தை எதிர்மறையாக பேசியவர்கள் கேலி செய்தவர்கள், தற்போது நடைபயணம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். அதிலும் பாஜகவினர் நடைபயணம் செய்யத் தொடங்கி இருக்கிறார்கள். ராகுல் காந்தியின் வழியில் பாஜகவினர் தொடங்கி இருப்பது தெரிய வருகிறது. இந்த நடை பயணத்தில் பாஜகவினர் மக்களிடம் பரிதாபங்களையும், வெறுப்பையும் கொண்டு செல்லாமல் அன்புடன் செல்ல வேண்டும் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications