பத்திரத்தை அடமானம் வைத்து கடன் வாங்கியவரின் புத்திசாலித்தனம்.. விருதுநகர் வங்கிக்கு தரமான சம்பவம்
விருதுநகர்: வங்கியில் நிலம் அல்லது வீட்டு பத்திரங்களை அடகு வைத்து கடன் வாங்கினால், அந்த பத்திரங்கள் மற்றும் கடனை கட்டியதற்ககான தடையில்லா சான்று ஆகியவற்றை முறையாக வாங்கிவிடுங்கள். ஒருவேளை வங்கி நிர்வாகம் கடனை முறையாக திரும்ப செலுத்திய பிறகும் தரவில்லை என்றால், தாரளாமாக நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம். அந்த வங்கிக்கு பத்திரங்களை திரும்பதர சொல்லி நீதிமன்றம் உத்தரவிடும். அத்துடன் இழப்பீடும் வழங்க உத்தரவிடும். இதுபோன்ற சம்பவம் விருதுநகர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
திருமணச் செலவு, கல்விச் செலவு, மருத்துவ செலவு, வியாபார அபிவிருத்தி, ஏற்கனவே உள்ள கடனை அடைப்பதற்கு, வீடு புதுப்பிப்பதற்கு மற்றும் வீட்டை பழுதுபார்ப்பதற்கு வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்க முடியும். இதே தேவைகளுக்கு உங்களுக்கு தோட்டம் அல்லது நிலம் இருந்தால் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.

கட்டப்பட்ட வீட்டிற்கான அசல் பத்திரம் மற்றும் மூலபத்திரம் உள்ளவர்கள், கட்டிடத்தை வங்கியின் பெயருக்கு அடமானம் செய்து கொடுப்பார்கள். மேலும் 30 ஆண்டுகள் வில்லங்க சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுவார்கள்... அதன்பிறகு பல்வேறு விதிமுறைளை பின்பற்றினால் தான் வீட்டின் பேரில் கடன் தருவார்கள்.
இதேபோல் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற வேண்டும் என்றால், கடன் வாங்குபவர் தனது நிலத்தை அடமானமாக வைக்க வேண்டியது அவசியம் ஆகும். அதேநேரம் கடன் வாங்குபவர் மற்றும் வங்கி ஆகியோருக்கு இடையே அடமான ஒப்பந்தம் செய்து இருக்க வேண்டியது அவசியம் ஆகும். அடமான ஒப்பந்தத்தின் சான்றாக அடமானப் பத்திரம் வழங்கப்படும்.
மேலும் கடன் வாங்குபவர், அடமானம் வைத்ததற்கு காப்பீட்டை செய்ய வேண்டும். மேலும் கடன் வாங்குபவர், தொழில்வரி, சொத்துவரி, மின் கட்டணம், தண்ணீர் வரி ஆகியவற்றை நிலத்திற்கு முறையாக செலுத்தி இருக்க வேண்டும். இதெல்லாம் சரியாக இருந்தால் தான் நில அடமான கடன் கிடைக்கிறது. இந்த கடன் வாங்கியவர்கள் கடனை சரியாக திரும்ப செலுத்த வேண்டும். ஆனால் எல்லாம் சரியாக செய்து கடனை அடைத்த பின்னரும் அடமான ஆவணங்களை வங்கிவழங்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடலாம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கடனை திருப்பி செலுத்திய நிலையில், அடமான ஆவணங்களை வழங்காத வங்கி, பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விருதுநகர் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தைலாகுளத்தைச் சோ்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவருடைய மனைவி கலைவாணி. கலைவாணி ராஜபாளையம் அருகே சேத்தூரில் உள்ள பொதுத் துறை வங்கிக் கிளையில் பால் பண்ணை அமைப்பதற்காக நிலத்தை அடமானம் வைத்து ரூ.5.25 லட்சம் கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து கடந்த 2024, செப்டம்பா் மாதம் ஒரே தவணையாக கடனை திருப்பி செலுத்தியுள்ளார். பின்னர், அதற்கான சான்றையும் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், கலைவாணி உயிரிழந்த நிலையில், அடமானம் வைத்த நிலத்தின் பத்திரத்தை கேட்டு, சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது குழந்தைகள் வங்கியில் விண்ணப்பித்தனா். ஆனால், பத்திரத்தை வழங்காமல் வங்கி அதிகாரிகள் அலைக்கழித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிவசுப்பிரமணியன் மற்றும் அவரது குழந்தைகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடுத்தனா்.
இந்த வழக்கில் குறிப்பாணை அனுப்பியும், வங்கி தரப்பில் இருந்து யாரும் முன்னிலையாகவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து பத்திரங்களை திரும்ப வழங்குவதுடன், புகாா்தாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.25 ஆயிரம், வழக்குச் செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.35 ஆயிரம் வங்கி சாா்பில் வழங்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் சக்கரவா்த்தி, உறுப்பினா் முத்துலட்சுமி ஆகியோா் உத்தரவிட்டனா்.












Click it and Unblock the Notifications