இளையராஜா கருத்தை ஒரு போதும் ஏற்க முடியாது! இந்திய கம்யூனிஸ்ட் மிகத் திட்டவட்டம்!
விருதுநகர்: அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா தெரிவித்த கருத்தை ஒரு போதும் ஏற்க முடியாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இளையராஜா தனது ஆரம்பக்காலத்தில் அண்ணன் பாவலருடன் சேர்ந்து கம்யூனிஸ்ட் கட்சி மேடைகளில் கச்சேரி நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது;

இளையராஜா கருத்து
''இளையராஜா சிறந்த இசையமைப்பாளார், இசை அமைப்பதில் சிறந்த ஞானி. இளையராஜாவின் வளர்ச்சியை கண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெருமிதம் கொள்கிறது. ஆனால் அதற்காக அம்பேத்காருடன் மோடியை அவர் ஒப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆளுநர் பதவி என்பது மிக உயரிய பதவி ஆகும். அந்த பதவிக்கு உரிய மதிப்பளித்து அலங்கரிக்கக் கூடிய வகையில் ஆளுநர்களின் செயல்பாடு இருக்க வேண்டும்.''

தேநீர் விருந்து
''ஆளுநரின் தேநீர் விருந்தை அரசும், அனைத்து கட்சிகளும் புறத்கணித்தது சரி தான். நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் ஒன்றிய அரசின் நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் சட்டங்களும் அனுகு முறையிலும் இருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி அத்தியாவசிய பொருட்கள் நியாயமாக மக்களுக்கு கிடைக்க ஒன்றிய அரசு எந்தவித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.''

விலைவாசி உயர்வு
''இலங்கையில் ஏற்பட்டு உள்ள விலைவாசி உயர்வை கண்டித்தும் அரசை ராஜினாமா செய்யக்கூறியும் கடந்த 10 நாட்களாக மக்கள் போராடி கொண்டு இருக்கிறார்கள். அங்கு அரசின் அடக்குமுறைகள் வெற்றி பெறவில்லை. இலங்கையில் சிங்களர் தமிழர் என பாகுபாடு இன்றி அனைவரும் ராஜபக்க்ஷே குடும்ப அரசை கண்டித்து போராடி கொண்டு இருக்கிறார்கள். இலங்கையில் நடைபெறும் போராட்டம் போல் இந்தியாவில் நடப்பதற்கு வெகு நாட்கள் ஆகாது.''

மதங்களின் பெயரால்
''விலைவாசி உயர்வு பிரச்சனையை திசை திருப்ப மதங்களின் பெயரால் நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. உள்துறை அமைச்சர் அனைவரும் இந்தியை பேச வேண்டும் இந்தியை படிக்க வேண்டும் என்று சர்வாதிகார போக்குடன் உத்தரவு போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழ்நாட்டில் பாஜகவை காலுன்றாமல் தடுத்து நிறுத்த அனைத்து நடவடிக்கைகளும் இந்திய கம்யூனிஸ்ட் மேற்கொள்ளும்.''

25 -வது மாநில மாநாடு
''ஆகஸ்ட் 6, 7, 8, 9 ஆகிய தேதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 25வது மாநில மாநாடு நடைபெறுகிறது. அதில் அரசியல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். அந்த மாநாட்டில் முக்கிய நிகழ்வாக ஆகஸ்ட் 9-ம் தேதி வெள்ளையனே வெளியேறு தினமான அன்று ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு மோடி அரசே வெளியேறு என்ற முழுக்கத்துடன் பேரணி நடைபெறும்.''












Click it and Unblock the Notifications