1243 தூய்மை பணியாளர்களுக்கு 1 கிலோ இனிப்பு.. புடவை -வேட்டி சட்டை! கவனம் ஈர்த்த திமுக எம்.எல்.ஏ!
விருதுநகர்: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், ஒரு கிலோ இனிப்பு, புடவை, வேட்டி சட்டை உள்ளிட்ட தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கியுள்ளர் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.
அண்மையில் தான் 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளியை ஒட்டி புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து கவனம் ஈர்த்திருந்தார் இவர்.
இப்போது அடுத்தபடியாக 1243 தூய்மைப் பணியாளர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கி மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

ராஜபாளையம் தொகுதி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பவர் தங்கபாண்டியன். 2வது முறை சட்டமன்ற உறுப்பினராக உள்ள இவர் கடந்த 3 ஆண்டுகளாக தூய்மைப் பணியாளர்களுக்கு தீபாவாளி புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வாங்கிக் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இந்தாண்டும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும், ஒரு கிலோ இனிப்பு, புடவை, வேட்டி சட்டை உள்ளிட்ட தீபாவளி பரிசுப் பொருட்களை வழங்கினார் திமுக எம்.எல்.ஏ. தங்கபாண்டியன்.

ஆதரவற்ற குழந்தைகள்
ஒரு வாரத்துக்கு முன்னர் தான் 211 ஆதரவற்ற குழந்தைகளுக்கு அவர்கள் விரும்பும் புத்தாடைகளை ஜவுளிக்கடைக்கே அழைத்துச் சென்று வாங்கிக் கொடுத்தார். தனது மூன்று மாத சட்டமன்ற உறுப்பினர் நிதியின் மூலம் புத்தாடைகள் வாங்கிக் கொடுத்து கவனம் ஈர்த்திருந்த அவர் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார். இதனிடையே கொரோனா காலத்தில் தூய்மைப் பணியாளர்கள் ஆற்றிய சேவையை எண்ணிப்பார்த்து அப்போது முதல் அவர்களுக்கு இனிப்புகளும், புத்தாடைகளும் வழங்கி கவுரவித்து வருகிறார் தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.

ஜவுளித்தொழில்
தங்கபாண்டியன் எம்.எல்.ஏ.வை பொறுத்தவரை ஜவுளித்தொழில் செய்து வருவதால் அவருக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பதில் சிரமம் ஏதும் இருக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் தங்கபாண்டியனிடம் இருந்து வேட்டி சட்டை, சேலை, வந்துவிடும் என்பதால் தூய்மைப் பணியாளர்கள் பலரும் தீபாவளியை ஒட்டி ஜவுளி எடுக்கவே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகள், தூய்மைப் பணியாளர்கள் என நலிவுற்றோருக்கு உதவி செய்வதன் மூலம் தங்கபாண்டியன் மீதான இமேஜ் ராஜபாளையம் மக்களிடையே உயர்ந்து வருகிறது.

டெக்ஸ்டைல்
ராஜபாளையத்தை பொறுத்தவரை டெக்ஸ்டைல் சிட்டி என்றே கூறலாம். அந்தளவுக்கு திருப்பூருக்கு அடுத்தபடியாக அங்கு ஸ்பின்னிங் மில்கள் இயங்கி வருகின்றன. அதேபோல் தனியார் ஆயத்த ஆடை நிறுவனங்களும் ராஜபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications