காலையிலேயே துப்பாக்கி சத்தம்.. ராஜபாளையம் கோவிலில் 2 காவலாளிகளை கொன்றவர் சுட்டுபிடிப்பு.. அதிரடி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள பழமையான தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பணியாற்றி வந்த 2 காவலாளிகள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் அந்த கொலை வழக்கில் தொடர்புடைய நாகராஜை இன்று போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சேத்தூரை அடுத்த தேவதானம் பகுதியில் அருள்மிகு நச்சாடை தவிர்த்தருளிய சாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது.

பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக இந்த கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் வரும் இக்கோயிலுக்கும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இங்கு தெற்கு தேவதானம் பகுதியை சேர்ந்த பேச்சிமுத்து (50), வடக்கு தேவதானம் பகுதியை சேர்ந்த சங்கரபாண்டியன் (65) ஆகியோர் இரவு நேரத்தில் காவலாளிகளாக பணியாற்றி வந்தனர். இருவரும் வழக்கம்போல் நேற்று முன்தினம் இரவில் கோவிலில் காவல் பணியில் ஈடுபட்டார். இதையடுத்து நேற்று காலையில் பகல்நேர காவலாளி மாடசாமி கோவில் கதவை திறந்து பார்த்தார்.
அப்போது இரவு காவலாளிகளான பேச்சி முத்து, சங்கரபாண்டியன் ஆகியோர் இறந்து கிடந்தனர். இவர்கள் 2 பேரும் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தனர். கோவில் வளாகத்தில் ரத்தம் சிதறி கிடந்த அவர்கள் இறந்து கிடந்தனர். இதுபற்றி உடனடியாக மாடசாமி சேத்தூர் காவல் நிலையத்தில்புகாரளித்தார். போலீசார் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த இரட்டை கொலை சம்பவம் ராஜபாளையம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் கொலையாளியை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர். தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் தான் கொலை வழக்கில் தொடர்புடைய நாகராஜ் என்பவரை போலீசார் இன்று காலையில் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். நாகராஜை கைது செய்ய போலீசார் சென்றனர். அப்போது அவர் தப்பிக்க முயன்றார்.
அவரை விரட்டி பிடிக்க சென்ற போலீசாரை தாக்கி உள்ளார். எப்படியாவது தப்பித்து விட வேண்டும் என்று அவர் போலீசாரை தாக்கிவிட்டு ஓட்டம் பிடித்தார். சரணடையும்படி போலீசார் கூறியும் அவர் கேட்கவில்லை. அதோடு தொடர்ந்து அவர் ஆக்ரோஷமாக செயல்பட்டார். இதனால் பாதுகாப்பு கருதி போலீசார் நாகராஜின் காலில் சுட்டனர். காலில் குண்டு பாய்ந்ததும் அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications