விடாமல் பெய்யும் கனமழை.. சதுரகிரி கோயிலுக்கு செல்ல வழங்கப்பட்ட அனுமதி ரத்து! பக்தர்கள் ஏமாற்றம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. பிரதோஷம், பவுர்ணமி காரணமாக 24ம் தேதி முதல் 27ம் தேதி மலையேற ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அனுமதி தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டுக்கு வரும் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

தரை மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் இருக்கும் இந்த கோயிலுக்கு செல்ல வருடத்தின் சில குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே வனத்துறையினர் அனுமதி வழங்கி வருகின்றனர். காரணம் இக்கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் காட்டாறுகள்தான். இந்த ஆறுகளை கடந்துதான் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல முடியும். வழக்கமாக இந்த ஆறுகள் வறண்டு காணப்பட்டாலும் திடீரென பெய்யும் மழை காரணமாக எதிர்பாராத வெள்ளம் ஏற்படும் அபாயமும் இருக்கிறது. எனவேதான் இங்கு வனத்துறையினரின் கண்காணிப்பு அதிகம்.
தற்போதைய நிலையில் தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. சதுரகிரி அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையிலும் கனமழை பெய்து வருவதால் சதுரகிரி மலை கோயிலுக்கு செல்லும் வழியில் இருக்கும் காட்டாற்றில் வெள்ளம் ஏற்பட இருக்கிறது. இது தவிர மண் சரிவும் ஏற்படலாம். எனவே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications