அண்ணாமலை வருகைக்கு முன்பே.. விருதுநகர் பாஜக அலுவலகத்தில் பாரத மாதா சிலை அகற்றம்.. இரவில் பரபரப்பு
விருதுநகர்: அண்ணாமலையின் பாதயாத்திரையையொட்டி விருதுநகர் பாஜக அலுவலகத்தல் வைக்கப்பட்ட பாரத மாதா சிலையை வருவாய்த்துறையினர் இரவோடு இரவாக அகற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் சிலை அகற்றத்தின் பின்னணியில் உள்ள பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பாஜக தலைவர் பாதயாத்திரையை தொடங்கி உள்ளார். கடந்த மாதம் 28 ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் ‛என் மண்.. என் மக்கள்' என்ற பெயரிலான பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார்.

இந்த நடைப்பயணம் என்பது ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரையில் நடந்து முடிந்துள்ளது. அடுத்ததாக விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் விருதுநகரில் சாத்தூர் சாலை சந்திப்பு அருகே உள்ள கிழக்கு மாவட்ட பாஜக அலுவலக வளாகத்தில் 5 அடி உயரத்தில் பாரதமாதா சிலை வைக்கப்பட்டது. இந்த சிலையை பாஜகவினர் வைக்க யாரிடமும் அனுமதி பெறவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார், வருவாய்த்துறையினர் பாஜக அலுவலகம் சென்று சிலையை அகற்றும்படி நிர்வாகிகளிடம் கூறினர்.
ஆனால் அவர்கள் சிலையை அகற்ற மறுத்தனர். சிலையை பாஜக அலுவலகத்தில் தான் வைத்துள்ளோம். இதனால் அனுமதி என்பது தேவையில்லை எனக்கூறி பாரதமாதா சிலையை அகற்ற நிர்வாகிகள் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
இருப்பினும் அதிகாரிகள் விடவில்லை. முதலில் பாரத மாதா சிலையின் மீது துணி சுற்றி வருவாய்த்துறை அதிகாரிகள் மறைத்தனர். அதன்பிறகு அந்த சிலையை வருவாய்த்துறையினர் அகற்றி அங்கிருந்து எடுத்து சென்றனர். இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரவோடு இரவாக இந்த சம்பவம் நடந்தது விருதுநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications