தமிழகத்தில் இப்படி நடந்ததே இல்லை..மகப்பேறு பலி இல்லாத முதல் மாவட்டம் இதுதான்.. சாதித்த விருதுநகர்
விருதுநகர்: தமிழகத்தில் முதல் முறையாக கடந்த ஓராண்டில் மகப்பேறு சிகிச்சையின்போது ஒரு பலி கூட ஏற்படாமல் சரியாக சிகிச்சை வழங்கி விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை மாவட்டம் சாதித்துள்ளது. தமிழகத்தில் இப்படி நடப்பது இதுதான் முதல் முறையாகும். இதன்மூலம் விருதுநகர் சுகாதார மாவட்டம் புதிய சாதனை படைத்துள்ளது.
இந்தியா முழுவதும் பிரசவத்தின்போது (மகப்பேறு) ஏற்படும் தாய்- சேய் இறப்புகளை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரமு், ஒவ்வொரு மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது. இதற்காகவே கர்ப்பிணி பெண்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் முறையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இருப்பினும் கூட பிரசவ கால சிகிச்சையின்போது பெண்கள், சிசுக்கள் இறக்கும் சம்பவங்கள் துரதிர்ஷ்வடசமாக நடந்து விடுகிறது. இந்நிலையில் தான் கடந்த ஓராண்டில் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் மகப்பேறு சிகிச்சையின்போது பலி இன்றி டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் சாதித்து காட்டி உள்ளனர். அது எப்படி நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அதாவது தமிழ்நாட்டில் மகப்பேறுவின்போது ஏற்படும் பலி எண்ணிக்கை என்பது தொடர்ச்சியாக குறைக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த 2022-2023ம் ஆண்டில் இந்த பலி எண்ணிக்கை என்பது 52.3 சதவீதமாக இருந்தது. இது கடந்த 2023-2024ம் ஆண்டில் 45.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது சுகாதாரத்துறையின் சாதனையாகும். அதேபோல் ஒவ்வொரு சுகாதாரத்துறை மாவட்டம் வாரியாக மகப்பேறு சிகிச்சையின்போது கடந்த 2023-2024ம் ஆண்டில் ஏற்பட்ட பலி விபரங்கள் என்பது வெளியாகி உள்ளது.
அந்த வகையில் தான் விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் பலி எதுவும் ஏற்படாமல் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் சாதித்துள்ளனர். அதாவது விருதுநகர் வருவாய் மாவட்டத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 2 சுகாதார மாவட்டங்கள் உள்ளன. ஒன்று விருதுநகர் சுகாதார மாவட்டம். இன்னொன்று சிவகாசி சுகாதார மாவட்டம். சிவகாசி சுகாதார மாவட்டத்தில் இந்த முறை பிப்ரவரி வரை 2 தாய்கள் பலியாகி உள்ளனர்.
மாறாக விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் பலி எதுவும் ஏற்படவில்லை. விருதுநகர் சுகாதார மாவட்டத்தில் 22 ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. இங்கு கடந்த 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரை மொத்தம் 7,991 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் தாயும், சேயும் நலமாக உள்ளனர். இதன்மூலம் ஓராண்டில் மகப்பேறு சிகிச்சையில் இறப்பு இல்லாத முதல் மாவட்டமாக விருதுநகர் சுகாதார மாவட்டம் மாறி உள்ளது. கடந்த 2022-2023ம் ஆண்டில் மொத்தம் 8,483 குழந்தைகள் பிறந்தன. இதில் 6 குழந்தைகளின் தாய்கள் பலியாகின. ஆனால் இந்த முறை பலி எதுவும் ஏற்படவில்லை.
இதுதொடர்பாக மகப்பேறு மருத்துவர்களின் மாவட்ட ஆலோசகர் டாக்டர் பிச்சைகாளி கூறுகையில், ‛‛கலெக்டர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளின் கூட்டு முயற்சியால் தான் இந்த சாதனை கிடைத்துள்ளது. ஆரம்ப சுகாதார நியைலங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் இடையே சிகிச்சை பரிந்துரை தொடர்பாக நல்ல கட்டமைப்பு உள்ளது. இதற்காக விருதுநகர் கலெக்டர்2022-ல் ஒரு வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினார்.
அந்த வாட்ஸ்அப் குழுவில் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவர்களும் பிரசவம் குறித்த அறிவிப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார். மேலும் குறைந்த ஆபத்து கொண்ட கர்ப்பிணிகள், அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிகள் என்று அடையாளம் கண்டு சிகிச்சை முறை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர CEmONC மையங்களில் சிறந்த உள்கட்டமைப்பு உள்ளது. இதுவும் இந்த சாதனைக்கு முக்கிய காரணமாகும். உதவியது, டாக்டர் பிச்சைகாளி கூறினார்.
இந்நிலையில் தான் 2023-2024ம் ஆண்டில் மகப்பேறு பலியின்றி சாதித்து காட்டிய விருதுநகர் சுகாதாரத்துறை மாவட்டத்துக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பாராட்டு தெரிவித்தார். இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறுகையி்ல, ‛‛விருதுநகர் சுகாதார மாவட்டத்தை பிற மாவட்டங்கள் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் தமிழகத்தில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் தான் நடக்கின்றன. இதில் 59 சதவீத பிரசவம் என்பது அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவங்கள் குறித்து தணிக்கை நடத்தப்படும்'' என்றார்.
சுகாதார செயலாளர் சுப்ரியா சாஹு கூறுகையில், ‛‛2014 ஏப்ரல் முதல் 2024 மார்ச் வரை 10 ஆண்டு காலத்தில் ஏற்பட்ட மகப்பேறு இறப்பில் 75 சதவீதம் என்பது பெண்களின் பிரசவத்துக்கு முந்தைய காலத்திலும், 25 சதவீதம் என்பது பிரசவத்துக்கு முந்தைய காலத்திலும் நடந்துள்ளது'' என்றார். தேசிய சுகாதார இயக்கம்-தமிழ்நாடு பணி இயக்குனர் ஷில்பா பிரபாகர் கூறுகையில், ‛‛தடுக்கக்கூடிய இறப்புகளை தடுப்பதே சுகாதார அதிகாரிகளின் நோக்கமாக இருக்க வேண்டும். கர்ப்பிணிப் பெண்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்'' என்றார்.
அதேபோல் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனர் டாக்டர் டி எஸ் செல்வவிநாயகம் கூறுகையில்,‛‛பிரசவத்தின்போது தாய் இறப்புக்கு ரத்தம் வெளியேறுவது, உயர்ரத்த அழுத்தம், செப்சிஸ் உள்ளிட்டவற்றால் தான் ஏற்படுகிறது. இதனால் பெண்களும் முன்கூட்டியே உஷாராக இருக்க வேண்டும்'' என்றார். இந்நிலையில் தான் தற்போது விருதுநகர் சுகாதார மாவட்டத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications