குட் பேட் அக்லி படம் பார்க்கச் சென்ற அஜித் ரசிகருக்கு நேர்ந்த கொடூரம்.. விருதுநகரில் பரபரப்பு
விருதுநகர்: நடிகர் அஜித்குமார், நடிகை திரிஷா நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது குட் பேட் அக்லி திரைப்படம். விருதுநகரில் உள்ள அப்சரா ராஜலட்சுமி தியேட்டரில் ஹவுஸ்புல் ஆனதால் தியேட்டர் நுழைவாயிலுக்குள் முந்தியடித்துக் கொண்டு ஓடிய ரசிகர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் அஜித்குமாரர், நடிகை திரிஷா நடிப்பில் வெளியாகியுள்ளது குட் பேட் அக்லி திரைப்படம். விடாமுயற்சி திரைப்படத்துக்குப் பின்னர் மீண்டும் அஜித்துடன் இணைந்து திரிஷா இப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் அர்ஜூன் தாஸ், பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறப்புக் காட்சி பார்த்த பல ரசிகர்கள் படம் நன்றாக உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
குட் பேட் அக்லி படத்திற்காக நடிகர் அஜித் 163 கோடி ரூபாய் சம்பளமும், திரிஷா 4 கோடி ரூபாயும் சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை முதலே அனைத்து திரையரங்குகளிலும் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அஜித்தின் விடாமுயற்சி படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத நிலையில் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.
ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கமர்ஷியல் கொண்டாட்டத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு பாசிட்டிவான ரிவ்யூக்கள் வந்து கொண்டிருக்கின்றன. அஜித்தின் பழைய படங்களின் ரெபரென்ஸ்கள் வைக்கப்பட்டு, மாஸ் டயலாக்குடன் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கேரள ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒரு தரப்பினர் மங்கத்தாவிற்கு பின்னர் அஜித்தின் மாஸ் படம் என்றும், ஒரு சிலர் அஜித் படங்களுடைய தொகுப்பு போல இந்தப் படம் உள்ளதாவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்படத்தின் டிரெயிலரே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்ததால், அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. தியேட்டர்கள் முன்பு ரசிகர்களின் கூட்டம் களைகட்டியது. அஜித்தின் கட் அவுட்டுகள் முன்பு நடனமாடியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில், விருதுநகரில் உள்ள அப்சரா ராஜலட்சுமி தியேட்டரில் ஹவுஸ்புல் ஆனதால் தியேட்டர் நுழைவாயிலுக்குள் முந்தியடித்துக் கொண்டு ஓடிய ரசிகர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ரசிகர் ஒருவரை பவுன்சர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகரில் பிரபலமான தியேட்டரான அப்சரா, ராஜலட்சுமி திரையரங்கில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தைக் காண அஜித் ரசிகர்கள் பலரும் அதிகாலை முதலே குவியத் தொடங்கினர். நுழைவுவாயில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்டமான அஜித்தின் கட்அவுட்டுகளுக்கு பாலபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்க உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ராஜலட்சுமி தியேட்டரில் ஹவுஸ்புல் ஆனதால் ரசிகர்கள் நீண்டநேரம் காத்திருந்தனர். நுழைவுவாயில் கதவு திறக்கப்பட்டவுடன் ரசிகர்கள் முந்தியடித்துக் கொண்டு உள்ளே செல்ல முயன்றனர். பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒருகட்டத்தில் அஜித் ரசிகர்களுக்கும், பவுன்சர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் பவுன்சர் ஒருவர் அஜித் ரசிகரை தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு நெட்டிசன்கள் பலர் கண்டனம் தெரிவித்தும், சிலர் முந்தியடித்துக் கொண்டு ஓடிய ரசிகர்களை விமர்சனம் செய்தும் சோஷியல் மீடியாக்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications