"ரெடியா இருங்க".. ஆபரேஷன் 40க்கு பிள்ளையார் சுழி போட்ட ஸ்டாலின்.. "பெரிய" தலை சொன்னதை பார்த்தீங்களா?
விருதுநகர்: திமுக முப்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் நேற்று பேசிய விஷயங்கள் கவனம் பெற்றுள்ளன. 2024 லோக்சபா தேர்தல் பிரச்சாரத்திற்கு அவர் பிள்ளையார் சுழி போட்டு விட்டதாக அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூரில் நேற்று திமுக முப்பெரும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு இருந்தது.
இந்த விழாவில் பல்வேறு நபர்களுக்கு விருதுகளை வழங்கிச் சிறப்பித்தார் முதல்வரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின். 2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டம் போல இந்த கூட்டம் நடைபெற்றது.
விட மாட்டேன்! ஆளுநரை வைத்து டெல்லி போட்ட
ஸ்டாலின் என்ன சொன்னார்?
இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார். மத்திய அரசி கல்விக்கொள்கை, தேசிய அளவில் மத்திய அரசு மாநில அரசுகளை கட்டுப்படுத்த நினைப்பது, இந்தி திணிப்பு, மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்படுவது என்று பல விஷயங்களை முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதோடு ஆளுநர்களுக்கு எதிராகவும் முதல்வர் ஸ்டாலின் வலிமையான கருத்துக்களை வைத்தார். இந்த நடந்த முப்பெரும் விழா கிட்டத்தட்ட 2024 தேர்தல் பிரச்சாரத்திற்கான டீசராகவே பார்க்கப்பட்டது.
டீசர்
முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சில், இந்த தேசத்திற்கே நாம் செய்ய வேண்டிய கடமை ஒன்று இருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்ல எல்லா மாநிலங்களும் தன்னிறைவு பெற்று இருக்க வேண்டும். இந்தியாவின் எல்லா மாநிலங்களும் வலிமையாக, வளமாக இருக்க வேண்டும். நாம் வலிமையாக, வளமாக இருப்பதால்தான் மக்களுக்கு நன்மைகளை செய்ய முடிகிறது. மாநிலங்கள் வலிமையாக இருப்பதுதான் இந்த தேசத்திற்கு வலிமையை கொடுக்கும். அப்போதுதான் மக்கள் நலத்திட்டங்களை பெற முடியும். மாநிலங்களின் தனித்தன்மையும் பாதுகாக்கப்படும்.
நலத்திட்டங்கள்
மக்களுக்கு நலத்திட்டங்களை கொண்டு செல்ல முடிகிறது. ஒற்றை மொழியான இந்தியை திணிப்பதிலும், ஒற்றை திட்டங்களை கொண்டு வருவதிலும் ஒன்றிய அரசு முனைப்பு காட்டுகிறது. இது மாநில உரிமைகளை பாதிக்கும். ஜிஎஸ்டி, நீட், புதிய கல்விக்கொள்கை எல்லாம் மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளது. இதை எல்லாம் தடுக்க வேண்டும். அதற்கு திமுகவின் கரங்களை நீங்கள் வலுப்படுத்த வேண்டும். கூட்டாச்சியை, மாநில சுயாட்சியை, சமத்துவத்தை, சகோதரத்துவத்தை, மொழி உரிமையை, சமூக நீதியை இந்தியா முழுமைக்கும் நாம் கொண்டு செல்ல வேண்டும்.
கடமை
அந்த கடமையை மனதில் வைத்து நாம் செயல்பட வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெற்றிபெற வேண்டும். 40 இடங்களில் 40ஐயும் வெல்ல வேண்டும். அதுவே நாம் மாநில சுயாட்சியை காப்பதற்கான வழியாக இருக்கும். இதற்கு களப்பணி ஆற்ற வேண்டும். பெரியார், அண்ணா பெயரில் நாம் மீண்டும் நாடாளுமன்றத்தில் பதவி ஏற்க வேண்டும். அதற்கு இப்போது நீங்கள் களப்பணி ஆற்ற தயாராக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஆபரேஷன் 40
40க்கு 40 இடங்களை பெற வேண்டும் என்று நேற்று முதல்வர் ஸ்டாலின் பேசியது தேசிய அளவில் கவனம் பெற்றது. 2024 லோக்சபா தேர்தலுக்கான வேலைகளை அவர் இப்போதே தொடங்கிவிட்டார் என்று அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் எழுந்துள்ளன. நேற்று மத்திய அரசுக்கும், பாஜகவிற்கும் எதிராக முதல்வர் ஸ்டாலின் பேசினார். ஆனால் அதே சமயம் மோடிக்கும், ஸ்டாலினுக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி அமைச்சர், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசினார். அவர் தனது பேச்சில், கட்சி, ஆட்சி இரண்டையும் ஒன்றாக கவனிக்க வேண்டும்.
ஆட்சி
அந்த திறமை எல்லா தலைவர்களுக்கும் இருக்காது. அது முதல்வர் ஸ்டாலினுக்கு மட்டுமே உள்ளது. பாஜக திமுக இடையே பல வேறுபாடு இருக்கலாம். ஆனால் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் அன்பாக இருப்பார். உங்களிடம் பிடித்து இருக்கிறது. நீங்கள் எங்கள் வீட்டில் தங்குங்கள் என்று மோடி ஸ்டாலினிடம் கூறினார். கட்சி, ஆட்சி எல்லாம் போகட்டும் உங்களை பிடித்து இருக்கிறது என்று கூறினார். அதுதான் திமுக. அதுதான் முதல்வர் ஸ்டாலின், என்று துரைமுருகன் பேசி உள்ளார்.