சாவிலும் இணை பிரியாத தம்பதி.. சிவகாசியில் மண்ணில் பிரிந்த கணவனை விண்ணில் சந்திக்கும் மனைவி
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் செல்லியாரம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மீனாட்சி சுந்தரம் . இவர் சைக்கிளில் சென்று ஊறுகாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமி இந்த தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். இதில் மீனாட்சி சுந்தரம் நேற்று அதிகாலை காலமானார். கணவர் இறந்த நிலையில், மனைவியும் உயிரிழந்தார். புத்தாண்டில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
இப்படியும் சாவு வருமா என்று பலரும் யோசிப்பார்கள்.. ஒற்றுமையாக வாழ்ந்து வரும் தம்பதிகள், சாவிலும் இணை பிரியக்கூடாது என்று நினைப்பார்கள்.. மிக அபூர்வமாகவே கணவன் மனைவி ஒரே நாளில் மண்ணுலகைவிட்டு விண்ணில் போய் வாழ்வார்கள்.. இது கடைசி காலக்கட்டத்தில் ,அதுவும் வயது முதிர்ந்த பின்னர் வருவது நடக்கும். மிகவும் உருக்கமானதாக இருக்கும். தன் துணை இல்லாமல் வாழ முடியாமல் பிரிந்து செல்வது அவ்வபோது நடக்கிறது. அப்படித்தான் சிவகாசியில் நடந்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி திருத்தங்கல் பகுதியில் செல்லியாரம்மன் கோவில் தெருவை சேர்ந்த 84 வயதாகும் மீனாட்சி சுந்தரம் என்பவர் சைக்கிளில் சென்று ஊறுகாய் வியாபாரம் செய்து வந்தார். இவருடைய மனைவி லட்சுமிக்கு 76 வயது ஆகிறது. இந்த தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனர். மீனாட்சி சுந்தரம் கடந்த 3 மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை மீனாட்சி சுந்தரம் உயிரிழந்தார். இதனால் மனைவி லட்சுமி, துக்கம் தாங்காமல் மீனாட்சிசுந்தரம் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டு இருந்தார். இந்தநிலையில் நேற்று மதியம் மீனாட்சிசுந்தரத்தின் இறுதிச்சடங்கு பணிகளை உறவினர்கள் செய்து கொண்டிருந்தனர். அப்போது மூதாட்டி லட்சுமியும் திடீரென மயங்கி விழுந்தார். சற்று நேரத்தில் அவரும் உயிரிழந்தார்.
சாவிலும் இணைபிரியாத இந்த தம்பதியின் உடல்களுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்தனர். புத்தாண்டு தினத்தில், கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் சிவகாசியில் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications