திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் தவாக? 2 நொடி கேப் விட்டு வேல்முருகன் சொன்ன பதில்! என்ன பாருங்க
விருதுநகர்: திமுக கூட்டணியில் உள்ள வேல்முருகன் அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறலாம் என்றும் சொல்லப்பட்ட நிலையில், இது தொடர்பாக தவாக தலைவர் வேல்முருகன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள அவர், பாஜகவை எதிர்க்கும் கட்சிகளுக்கு ஆதரவளிப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இப்போது ஆளும் திமுக கூட்டணியில் வேல்முருகன் இருக்கிறார். இருப்பினும், இவருக்கும் திமுகவுக்கும் இடையே அதிருப்தி இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தவாக தலைவர் வேல்முருகன், சில முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டார். பாஜகவை மனிதக் குல விரோத கட்சி என விமர்சித்த அவர், கூட்டணி தொடர்பாகவும் முக்கிய கருத்துகளைக் குறிப்பிட்டார்.

வேல்முருகன்
இது குறித்து விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய தவாக தலைவர் வேல்முருகன், "பாஜக ஒரு மனிதக் குல விரோத கட்சி. உத்தரப் பிரதேசத்தில் பூட்டி இருக்கும் மசூதியைத் தென்னை மரத்தைக் கொண்டு உடைக்க முயல்கிறார்கள். அங்குள்ள இஸ்லாமிய இளைஞர் மீது ஹோலி எனச் சொல்லி வண்ணத்தைப் பூசுகிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அடித்துக் கொல்கிறார்கள். ஓடும் பெண்ணின் தலையில் முட்டையை வீசி உடைக்கிறார்கள். இதெல்லாம் அநியாயம் இல்லையா..
ஏற்கனவே மாட்டைப் பிடித்துச் செல்வோர், மாட்டுக்கறி விற்போரை அடித்துக் கொன்றனர். இதுபோல மனிதக் குலத்திற்கே எதிராக உள்ள பாஜகவுடன் நாங்கள் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம். பாஜகவை நாங்கள் வலுமையாக எதிர்க்கிறோம். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஆதரிப்போம்" என்றார்.
கூட்டணி குறித்த கேள்வி
அப்போது கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "தேர்தலுக்குக் காலம் இருக்கிறது.. இப்போது கூட்டணி குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு, மீனவர்கள் கைது உள்ளிட்டவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகிறோம். நான் பல விஷயங்களில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு எதிராகச் சட்ட போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்று உரிமைகளை மீட்டுள்ளேன். இதனால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேல்முருகனை கண்டாலே பிடிப்பதில்லை.
வேல்முருகனை நேரடியாகத் தொட முடியாது என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் தெரியும். இதனால் அவர்கள் அரசு மூலம் தொந்தரவு கொடுக்கிறார்கள். பல்வேறு இடங்களில் எனது கட்சிக்காரர்களைக் கைது செய்து தொந்தரவு செய்கிறார்கள்.
சாய பட்டறைகள்
நாமக்கல், ஈரோட்டை நாசமாக்கிய சாய பட்டறைகள் இப்போது கடலூர் மாவட்டத்திற்கு வரத் திட்டமிட்டுள்ளனர். அதை எதிர்த்து 25 ஆயிரம் மக்களை எதிர்த்து போராட்டம் நடத்தினேன். இதனால் பெருநிறுவனங்கள் என் மீது கோபத்தில் உள்ளனர். அவர்களின் பணத்திற்கு விசுவாசமாக இருப்போர் தான் என் மீது அவதூறுகளை அள்ளிவிடுகிறார்கள்" என்றார்.
அதிருப்தி
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசினார். அப்போது அவர் கூறிய சில கருத்துகளுக்கு அதிமுக எம்எல்ஏ ஆர்.பி உதயகுமார் கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தார். இதையடுத்து வேல்முருகனின் கருத்தை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாகச் சபாநாயகர் அறிவித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த வேல்முருகன் சபாநாயகரின் இருக்கைக்குச் சென்று முழக்கமிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த சபாநாயகர் அப்பாவு, வேல்முருகன் அவை விதிகளை மீறுவதாகத் தெரிவித்தார். மேலும், முதல்வர் ஸ்டாலினும் வேல்முருகன் அதிகப்பிரசங்கித்தனமாக செயல்படுவதாகவும் அவை மாண்புக்கு எதிராகச் செயல்படுவதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications