உங்களை ரொம்ப பிடிக்கும்... எங்க வீட்டுக்கு வருவீங்களா... வர்றேம்மா.. சிறுமியை நெகிழவைத்த கனிமொழி..!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்ட கனிமொழி, 7-ம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கு சென்று நெகிழ வைத்தார்.
மேலும், அந்தச் சிறுமிக்கு ஸ்வீட் பாக்ஸ் ஒன்றையும் பரிசாக அளித்து படிப்பில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என அறிவுரையும் நல்கினார்.
தனது அழைப்பை ஏற்று கனிமொழி எம்.பி. தங்கள் வீட்டுக்கு வந்ததால் சிறுமி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிவிட்டார்.
விடியலை நோக்கி
விருதுநகர் மாவட்டத்தில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் பிரச்சார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளார் கனிமொழி. இந்நிலையில் அந்த மாவட்டத்தில் உள்ள ஆமத்தூர் என்ற கிராமத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கனிமொழி கலந்துகொண்டார். அப்போது கனிமொழியிடம் குறைகளை கூற விரும்புவோருக்கு மைக் தரப்பட்டது.
அக்கா வாங்க
அந்த வகையில் பேசுவதற்காக கை தூக்கிய ராஜகீர்த்திகா என்ற 7-வகுப்பு படிக்கும் சிறுமியிடம் மைக் கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய அந்த சிறுமி, '' அக்கா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும், எங்க வீட்டுக்கு நீங்க வருவீங்களா'' என வெள்ளந்தியாக கேட்க, சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியை அருகில் அழைத்த கனிமொழி ''கூட்டம் முடியட்டும் உங்க வீட்டுக்கு வந்துவிட்டு போகிறேன்'' என உறுதி கொடுத்துள்ளார்.
கனிமொழி அட்வைஸ்
கிராம சபைக் கூட்டம் முடிந்ததும் சிறுமி ராஜகீர்த்திகாவை அழைத்த கனிமொழி ''வாம்மா உங்க வீட்டுக்கு போகலாம்'' எனக் கூற ஆமத்தூர் கிராமமக்கள் நெகிழ்ந்து போகினர். பின்னர் சிறுமி வீட்டுக்கு சென்ற கனிமொழி, அவருக்கு ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை பரிசாக அளித்ததுடன் படிப்பு தான் முக்கியம், அதில் கவனமாக இருக்க வேண்டும் என அட்வைஸ் செய்திருக்கிறார்.
யதார்த்தம்
இத்தனைக்கும் சிறுமி ராஜகீர்த்திகாவின் தந்தை திமுகவில் கூட இல்லை, அவர் ஒரு விவசாயி. இதனிடையே கனிமொழி வருகை தொடர்பாக சிறுமி ராஜகீர்த்திகாவின் தந்தை குருசாமியை நாம் தொடர்பு கொண்டு பேசினோம், அப்போது கூறிய அவர், மேடம் வருவாங்கன்னு நாங்க எதிர்பார்க்கவே இல்லை. என் மகளுக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும், அவள் அழைப்பை ஏற்று மேடம் யதார்த்தமாக வந்துசென்றது எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது'' என்றார்.