குஜராத் மாடல்! தமிழகத்திலும் பசுவதை தடை சட்டம் வேண்டும்! நெருப்பை பற்ற வைத்த மன்னார்குடி ஜீயர்!
விருதுநகர் : தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு முதல்வராக இருக்க வேண்டுமே தவிர கட்சித் தொண்டராக இருந்து செயல்பட கூடாது எனவும், குஜராத்தை போன்று தமிழகத்திலும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என ஆண்டாள் கோயிலில் மன்னார்குடி செண்பகராம செண்டலங்கார ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.
தருமபுரம் ஆதீனத்தில் பட்டணப் பிரவேச நிகழ்வானது கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றது. திராவிடர் கழகத்தினரின் எதிர்ப்பால் ஆதினத்தை பல்லக்கில் அமர்த்தி பக்தர்கள் சுமந்து செல்ல தடை விதிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பழமைவாய்ந்த சைவ மடமான தருமபுரம் ஆதினத்தின் பட்டினப் பிரவேச நிகழ்வு அப்பகுதியில் பதற்ற நிலையை உருவாக்கியது

பல்லக்கு தூக்கும் நிகழ்ச்சி
ஆதினம் பல்லக்கு தூக்கும் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கூடாது எனவும், பல ஆண்டு காலமாக நடைபெறும் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது மக்கள் நம்பிக்கைக்கு எதிரானது என பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் கூறினர். அதே நேரத்தில் மனிதனை மனிதனே சுமக்கும் நிகழ்சிக்கு தடை விதிக்க வேண்டுமென திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள் கோரிக்கை விடுத்தன.

தமிழக அரசு அனுமதி
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு ஆதினங்களைச் சேர்ந்த ஆதீன கர்த்தாக்கள், ஆன்மீகவாதிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து நிகழ்ச்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு சிறப்பாகவே பட்டினப்பிரவேசம் நடந்தது. வழக்கம் போலவே ஆதீனத்தை பக்தர்கள் பல்லக்கில் அமர வைத்து சென்றனர்.

மன்னார்குடி செண்டலங்கார ஜீயர்
முன்னதாக இந்த தடை குறித்து பேசிய மன்னார்குடி செண்பகராமன் செண்டலங்கார ஜீயர் , இந்துக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் தமிழக அமைச்சர்கள் யாரும் வெளியில் நடமாட முடியாது என பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதையடுத்து இந்த விவகாரம் பெரிதான நிலையில் கடந்த சில நாட்களாக அவர் அமைதியாக இருந்தார்.இந்நிலையில் குஜராத்தை போல தமிழகத்திலும் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என புது பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார் மன்னார்குடி ஜீயர்.

முதல்வர் ஸ்டாலின்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மன்னார்குடி செண்பகராம செண்டலங்கார ஜீயர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு முதல்வராக இருக்க வேண்டுமே தவிர, கட்சித் தொண்டராக இருந்து செயல்பட கூடாது, திமுக அரசு தொடர்ந்து இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது. பழனி கோயிலில் ஆரத்தி எடுப்பதற்கு கூட அனுமதி இல்லை இது கண்டனத்துக்குரியது. தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு முதல்வராக இருக்க வேண்டுமே தவிர, கட்சித் தொண்டராக இருந்து செயல்பட கூடாது.

பசுவதை தடை சட்டம் வேண்டும்
இந்துக்களுக்கும் இந்து கோயில்களுக்கும் எந்தவிதமான அநியாயம் செய்யாமல் தமிழக முதல்வர் செயல்பட வேண்டும். குஜராத்தை போன்று தமிழகத்திலும் பசுவதை தடை சட்டம் கொண்டு வரவேண்டும். இந்து கடவுளை பேசினால் மட்டும் எந்த ஒரு அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை. தீவிரவாத தேசவிரோதிகள் தமிழக அரசு கிட்டே நெருங்குவதற்கு பயப்படுகிறது" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications