நேற்று திருமா -இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்! தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த குரல்!
விருதுநகர்: தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இதே கோரிக்கையை நேற்று விசிக தலைவர் திருமாவளவன் முன் வைத்திருந்த நிலையில் அவருக்கு வலு சேர்க்கும் வகையில் கே.பாலகிருஷ்ணனும் இதை தெரிவித்துள்ளார்.

மது விவகாரத்தில் தமிழக அரசு சில குழப்பமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக விமர்சித்த அவர், தானியங்கி இயந்திரம் மூலம் மதுவிற்பனை, விளையாட்டு மைதானங்களில் மதுவுக்கு அனுமதி என அரசின் முடிவுகளை சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசை பொறுத்தவரை இது போன்ற குழப்பமான நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்துவதற்கான பணிகளை தொடங்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் மே தின விழாவில் கலந்துகொண்ட கே.பாலகிருஷ்ணன் அங்கு செய்தியாளர்களை சந்தித்த போது இதனைக் கூறியிருக்கிறார்.
கடந்த 2 ஆண்டுகளாக மதுவிலக்கை பற்றி பேசாத நிலையில் இப்போது திமுக கூட்டணிக் கட்சிகளே அதைப் பற்றி பேசத் தொடங்கியிருப்பதும் அதனை அமல்படுத்த வலியுறுத்தி வருவதும் அரசியல் ரிதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
12 மணி நேர வேலை மசோதாவை முதலமைச்சர் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றும் இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications