46ஓட்டுல ஜெயிச்சிருப்பாரு.. 446ஓட்டுல ஜெயிக்க வச்சேன்.. சாத்தூர் எம்எல்ஏ பற்றி ராஜேந்திர பாலாஜி ஷாக்
விருதுநகர் : 2019ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில், 46 ஓட்டுல ஜெயிச்சிருப்பாரு.. 446 ஓட்டுல ஜெயிக்க வச்சேன்.. என சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மன் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலால் ராஜவர்மனுக்கு இந்த முறை சாத்தூரில் சீட் கிடைக்கவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த ராஜவர்மன், அதிமுகவில் இருந்து விலகி அமமுகவில் இணைந்தார். அமமுகவில் சேர்ந்த அன்று மாலையே ராஜவர்மன், சாத்தூர் தொகுதியின் அமமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் குஷியான ராஜவர்மன், அதிமுகவை தோற்கடித்தே தீர வேண்டும் என தீவிரமாக வேலை செய்து வருகிறார். செல்லும் இடங்களில் எல்லாம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார்.
பதிலடி
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சார்ந்த நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டுதலைமை வகித்து பேசினார். அப்போது அவர் சாத்தூர் தொகுதி எம்எல்ஏ ராஜவர்மனை கடுமையாக விமர்சித்து பதிலடி கொடுத்தார்.
446 ஓட்டுக்கள்
சாத்தூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஆர்.கே ரவிச்சந்திரன் அறிமுகப்படுத்தி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அப்போது பேசுகையில், இந்த சாத்தூர் தொகுதியில் அமமுக சார்பில் ராஜவர்மன் போட்டியிடுகிறார். இவர் சாத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட போது 46 ஓட்டில் வெற்றி பெற வேண்டியவர். ஆனால் 446 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து எம்எல்ஏ ஆக்கினேன்.
மாவட்ட செயலாளர் பதவி
ஆனால் மூன்றே மாதத்தில் ராஜவர்மன் அமைச்சர் பதவி ஆசையில் முதல்வரிடம் சென்றார். பின்னர் மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்றார். நல்ல வேளை முதல்வர் கொடுக்கவில்லை. என்னை ஏன் சிவகாசியில் வேட்பாளராக நிற்கவில்லை என்று அமமுக வேட்பாளர் ராஜவர்மன் கேட்கிறார்.
எங்கு நின்றாலும் வெல்வேன்
நான் விருதுநகர் மாவட்டத்தில் ரிசர்வ் தொகுதியை தவிர அனைத்து தொகுதியிலும் நின்று வெற்றி பெறுவேன். மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அனைத்து சமுதாயத்தினருக்கும் பிரதிநித்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே நான் ராஜபாளையம் தொகுதியில் நின்றுள்ளேன். ராஜபாளையம் தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்
ராஜவர்மன் டெபாசிட் காலி
சாத்தூர் தொகுதியில் ராஜவர்மன் டெபாசிட் இழப்பார். எங்களின் கூட்டணி ஆன்மீக கூட்டணி . முதல்வர் எடப்பாடியார் அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் மோடி உதவுவார். அதிமுக அறிவித்த திட்டங்களை நிறைவேற்றும். ஆனால் திமுகவினர் அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாமல் அவர்களுடைய குடும்பத்தையே காப்பாற்றுவார்கள்." இவ்வாறு பேசினார்.