பாடி லேங்குவேஜில் அசத்திய விஜய பிரபாகரன்.. பிரேமலதா தந்த விருதுநகர் சாய்ஸ்! கேப்டன் ரிட்டர்ன்ஸ் 2.0
விருதுநகர்: சிவகாசியில் நடைபெற்ற தேமுதிக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருக்கும் பேச்சானது, தமிழக அரசியலில் ஒரு முக்கிய விவாதத்தை கிளப்பியுள்ளது... குறிப்பாக "விருதுநகர் மாவட்டம் விஜயகாந்தின் கோட்டை" என்றும், வரும் தேர்தலில் விஜய பிரபாகரன் அங்குள்ள ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிடுவது உறுதி என்றும் அதிரடியாக அறிவித்திருக்கிறார்.. எதற்காக விருதுநகர் மாவட்டத்தை தேமுதிக தேர்ந்தெடுக்க வேண்டும்? சாத்தியக் கூறுகள் என்ன? சுருக்கமாக பார்ப்போம்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பேசும்போது, "விருதுநகர் மாவட்டம் விஜயகாந்தின் கோட்டை. விருதுநகர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் தான் விஜயபிரபாகரன் போட்டியிடுவார்.

மக்களவைத் தேர்தலில் விஜயபிரபாகரன் பெற்ற வெற்றி பறிக்கப்பட்டது. இந்த முறை அவரது வெற்றி உறுதி செய்யப்படும். அவர் சிவகாசி தொகுதியில் போட்டியிடுவது குறித்து பின்னர் முடிவு செய்வோம்" என்று தெரிவித்துள்ளார்.
வெற்றிக்கனி பறிக்குமா தேமுதிக
விருதுநகர் தொகுதியை குறி வைத்து பிரேமலதா பேசுவது, தேமுதிகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வை அப்பட்டமாக காட்டுகிறது. கடந்த எம்பி தேர்தலில் மிகக்குறுகிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட விஜய பிரபாகரனுக்கு, இந்த முறை எப்படியாவது வெற்றிக்கனியை பறித்து கொடுத்துவிட வேண்டும் என்பதில் அக்கட்சி உறுதியாக இருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தை தேமுதிக தனது கோட்டையாக கருதுவதற்கு பின்னால் வலுவான சில காரணங்களும் இருக்கத்தான் செய்கின்றன..
அதாவது, தேமுதிக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே தென் தமிழகத்தில், குறிப்பாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அக்கட்சிக்கென்று ஒரு ஸ்பெஷலான வாக்கு வங்கி இருந்து வருகிறது...
விருதுநகர் தொகுதி - கருப்பு எம்ஜிஆர்
விஜயகாந்த் மதுரை மண்ணை சேர்ந்தவர் என்றாலும், அவரது பூர்வீக வேர்கள் மற்றும் அவர் மீதான மக்களின் ஈர்ப்பு விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் அதிகம்.. அதுமட்டுமல்ல, சினிமாவை தாண்டி விஜயகாந்தின் கொடைத்தன்மையும், நேர்மறையான அரசியல் அணுகுமுறையும் இங்குள்ள அடித்தட்டு மக்களிடையே அவரை "கருப்பு எம்ஜிஆர்" ஆக நிலை நிறுத்தியுள்ளது..
இந்த உணர்வுப்பூர்வமான பிணைப்புதான், இன்று அவரது மகனுக்கும் ஒரு பாதுகாப்பான களமாக இந்த மாவட்டத்தை அடையாளம் காட்டுவதாக தெரிகிறது..
பிரேமலதா - திருப்புமுனை வார்த்தை
விஜய பிரபாகரனை பொறுத்தவரை, கடந்த எம்பி தேர்தல் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.. தேர்தல் முடிவுகள் அவருக்கு சாதகமாக வராவிட்டாலும்கூட, அவர் பெற்ற ஓட்டுகள் அரசியல் விமர்சகர்களை ஆச்சரியப்பட வைத்ததை இங்கு நாம் சொல்லியாக வேண்டும்..
"வெற்றி பறிக்கப்பட்டது" என்ற பிரேமலதா அன்று பிரஸ்மீட்டில் சொன்ன குற்றச்சாட்டு, தொண்டர்களிடையே ஒருவித அனுதாப அலையை அந்த நேரத்தில் தூண்டவே செய்தது.. இந்த அனுதாபத்தை வாக்குகளாக மாற்றுவதே தேமுதிகவின் தற்போதைய வியூகமாக உள்ளது..
விஜய பிரபாகரனின் பாடிலேங்குவேஜ்
இதுபோக, விஜயகாந்தின் பாடிலேங்குவேஜ், துணிச்சலான பேச்சு இதெல்லாம் விஜய பிரபாகரனிடமும் அப்பட்டமாக வெளிப்படுவதால், பழைய தொண்டர்கள் மீண்டும் உற்சாகமடைந்துள்ளனர்.
இருந்தாலும், தற்போதைய அரசியல் சூழல் சவால்கள் நிறைந்து காணப்படுகிறது.. திமுக, அதிமுக போன்ற மாபெரும் சக்திகள் ஏற்கனவே வலுவாக உள்ள நிலையில், விஜயகாந்தின் செல்வாக்கு அப்படியே அவரது மகனுக்கு கிடைக்குமா என்பது ஒரு கேள்விக்குறியே..
ஆனால், விஜயபிரபாகரன் தொடர்ந்து தொகுதி மக்களை சந்தித்து, அவர்களின் பிரச்சினைகளை கேட்டு, தீர்வு காண முயன்றால் மட்டுமே, விஜயகாந்தின் செல்வாக்கு அவருக்கு மாற்றமாகும்.
சூப்பர் சாய்ஸ் - "உள்ளம் தேடி இல்லம் நாடி"
"உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற முழக்கத்தோடு மக்களைச் சந்திக்கத் துடிக்கும் தேமுதிக, விருதுநகரை தனது மீட்சிக்கான தொடக்கப் புள்ளியாக தேர்ந்தெடுத்திருப்பது ஒரு மிகச்சிறந்த சாய்ஸ்தான்..
ஆனால், சிவகாசி போன்ற தொழில் நகரங்களில் தொழிலாளர் பிரச்சினைகள் உட்பட பொருளாதார சிக்கல்கள் ரொம்பவே அதிகம்... இதையெல்லாம் விஜய பிரபாகரன் எவ்வாறு கையாளப்போகிறார் என்பதில் தான் அவரது அரசியல் எதிர்காலமே அடங்கியுள்ளது... பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications