நிலத்தின் அடமான பத்திரம்.. விழித்த விருதுநகர் விஏஓ,எழுத்தர்! திருவாடானை தலையாரி சித்ரா அதுக்கு மேல
விருதுநகர் நிலத்தை அளவீடு செய்ய வேண்டுமென்றும், சாதி சான்றிதழ் வேண்டும் என்று கேட்டும், பட்டா மாறுதல் தேவை என்று கோரியும், உதவித்தொகை கோரியும் பல்வேறு விண்ணப்பங்களுடன் அரசு அலுவலகங்களுக்கு பொதுமக்கள் செல்கிறார்கள். அப்போது, அதிகாரிகள் விண்ணப்பதாரர்களிடமே நேரடியாக லஞ்சம் கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேரடியாகவே லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு புகாரை தந்துவிடுகிறார்கள். அந்தவகையில், நாள்தோறும் அதிகாரிகளின் கைது நடவடிக்கைகள் பெருகி வருகின்றன. இதில், விருதுநகர் மாவட்டமும் விதிவிலக்கல்ல.
2 நாட்களுக்கு முன்பு விருதுநகரில், விஏஓ கைதானார்.. அதாவது, மல்லாங்கிணர் சூரம்பட்டியைச் சேர்ந்த ஆசிர்வாதம் மகன் சூர்யகுமார் 25. இவரது அப்பாவின் பெயரிலுள்ள வீட்டு மனையை தனது பெயருக்கு பட்டா மாறுதல் செய்ய மல்லாங்கிணர் விஏஓ கரைமேலுவை அணுகியிருக்கிறார்..

சிக்கும் விஏஓக்கள்
இதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சமாக கேட்டிருக்கிறார்.. அதற்கு சூரியகுமார் ரூ.3 ஆயிரத்து 500 தருவதாக சொன்னாராம்.. பிறகு, இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரிவித்தார். அலுவலகத்தில் அவரிடம் பணத்தை சூர்யகுமார் கொடுத்தபோது அதை வாங்கிய விஏஓவை அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இந்நிலையில், மீண்டும் விருதுநகரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. விருதுநகர் கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தில் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை சேர்ந்த ஆரோக்கியசாமி, 1982ல் தனது வீட்டு பத்திரத்தை ரூ.3 ஆயிரத்திற்கு அடமானம் வைத்து கடன் பெற்றார்.
நிலுவைத் தொகைகள்
ஆனால், இப்படி கடன் பெற்றோரின் நிலுவை தொகைகளை கடந்த 2008ல் அரசு ரத்து செய்தது. இந்நிலையில், ஆரோக்கியசாமி தனது வீட்டு அடமானம் வைத்த பத்திரத்தை மீட்க 2 மாதங்களாக விருதுநகரில் உள்ள வீட்டு வசதி சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்திற்கு அலைந்துள்ளார்.
ஆனால், சார் பதிவாளர் முருகன், எழுத்தர் மோகன் ஆகியோர் ரூ.5 ஆயிரம் தர வேண்டும் என்று ஆரோக்கியசாமியிடம் கேட்டார்களாம். இதனால், ஆரோக்கியசாமி விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். இதை சார்பதிவாளர், எழுத்தர் இருவரிடமும் கொடுத்தார். அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
தலையாரி சித்ரா
நேற்று முன்தினம், ராமநாதபுரத்திலும் விஏஓ ஒருவர் கைதாகியிருந்தார்.. திருவாடானை தாலுகாவுக்கு உட்பட்டது பெறுவாக்கோட்டை கிராமம். இந்த பகுதியை சேர்ந்த ஒருவர், தன்னுடைய நிலத்தை அளந்து தர வேண்டும் என்று கூறி விஏஓ அலுவலகத்தில் மனு கொடுத்தார். அப்போது நிலத்தை அளப்பதற்கு லஞ்சமாக ரூ.3500 தரவேண்டும் என்று கிராம நிர்வாக அலுவலர் நைனா முகமது கூறினார். அதன்படி, 1000 அட்வான்ஸ் தரப்பட்டது.
மீதமுள்ள 2500 ரூபாயை கொடுப்பதற்கு முன்னதாக, லஞ்சம் கேட்பது பற்றி மனுதாரர் ராமநாதபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இறுதியில், விஏஓ நைனா முகமது, தலையாரி சித்ரா என இருவரையுமே போலீசார் கைது செய்தனர். நாளுக்கு நாள் அரசுஅலுவலகங்களில் லஞ்ச நடவடிக்கைகளும், கைது நடவடிக்கைகளும் பெருகி வருவது பொதுமக்களுக்கு கவலையை தந்துள்ளது.












Click it and Unblock the Notifications