பிரதமர் மோடியை உலுக்கிய விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து.. பலியானோர் குடும்பங்களுக்கு நிவாரணம்!
விருதுநகர்: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, தலா 2 லட்ச ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்த வெம்பக்கோட்டை அருகே குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் இன்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் 30க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு அறையில் மணி மருந்து எனப்படும் ரசாயன மூலப்பொருள் கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
வெடி விபத்தில் காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசு ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரையும் தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.
இதனையடுத்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். அதோடு பட்டாசு ஆலையில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 3 லட்சம் என்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சமும் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
ஒரே ரூமில் 8 பேர்.. இதான் விபத்துக்கு காரணம்! விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து பற்றி ஆட்சியர் விளக்கம்
இந்த நிலையில், பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்துக்கு பிரதமர் மோடி நிவாரணம் அறிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் நடந்த அசம்பாவிதம் குறித்து மிகுந்த வேதனையுடன் அறிந்தேன். இந்த இக்கட்டான நேரத்தில், என் எண்ணங்கள் சோகமாக இறந்தவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன.
காயமடைந்த அனைவரும் விரைவில் பூரண குணமடைய வேண்டுகிறேன். மேலும், விபத்தில் உயிரிழந்த குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 பிரதமர் நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications