விஜயபிரபாகரன் எனக்கும் மகன் மாதிரி.. சின்னப்பையன் நல்லாயிருக்கட்டும்.. ராதிகா சரத்குமார்
விருதுநகர்: விஜயபிரபாகரன் எனக்கும் மகன் மாதிரிதான், சின்ன பையன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும் என விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக ,நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவி வருகிறது.

விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூரும் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் 26 வயதான டாக்டர் கவுஷிக் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த விருதுநகரில் நாடார்களும் நாயுடுகளும் அதிகம் வசிக்கிறார்கள். விருதுநகர் தொகுதியின் எம்பியாக உள்ள மாணிக்கம் தாகூர் வெல்வாரா இல்லை, விஜய பிரபாகரனா, ராதிகா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாணிக்கம் தாகூரை விட்டுவிட்டு மற்ற இருவரை பார்த்தோமேயானால் யாருக்கு செல்வாக்கு என்ற கேள்வி எழுகிறது.
விஜய பிரபாகரனை எடுத்துக் கொண்டால் அவர் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர், மேலும் விருதுநகர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தவர்தான் விஜயகாந்த். மேலும் விஜயகாந்த் எப்படிப்பட்ட மனிதநேயம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் தற்போது நம்மிடம் இல்லை. எனவே விஜயகாந்தின் மரணம் அனுதாப ஓட்டுகளாக அவரது மகனுக்கு மாறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அது போல் ராதிகாவை எடுத்துக் கொண்டால் பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார். அவருடைய கணவர் சரத்குமார் நாடார் சமூகத்தை சேர்ந்தவர், ராதிகா நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். எனவே இரு சமுதாய ஓட்டுக்களும் ராதிகாவுக்கு கிடைக்குமா என்பது தெரியவில்லை. காரணம், சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த சரத்குமார், அதை பாஜகவுடன் இணைக்கலாமா என்பதை கட்சிக்காக உழைத்தவர்களிடம் கேட்காமல் மனைவியிடம் நள்ளிரவு கேட்டதாக அவர் சொன்னது விருதுநகர் வணிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
இந்த நிலையில் ராதிகா சரத்குமார் நேற்றைய தினம் மதுரை திருப்பரங்குன்றத்திலிருந்து தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் கூறுகையில் விருதுநகர் தொகுதி மக்களுக்காக நல்ல திட்டங்கள் செய்ய வாய்ப்புகள் உள்ளதால் நல்ல திட்டங்களை கொடுக்கலாம் என்ற நம்பிக்கையில் உள்ளேன்.
எதிர் வேட்பாளரான மாணிக்கம் தாகூரின் செயல்பாடு குறைவாக இருப்பதாகவும் அவர் மக்களை சந்திக்க தொகுதி பக்கமே வரவில்லை என்றும் கேள்விப்பட்டுள்ளேன். மறுமுனையில் போட்டியிடும் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் என் மகளுடன் படித்துள்ளார், அவர் எனக்கும் மகன் மாதிரிதான். சின்ன பையன் எங்கிருந்தாலும் நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு ராதிகா வாழ்த்தி பேசினார்.












Click it and Unblock the Notifications