தலைமறைவான இளைஞருடன் தங்கியிருந்த ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா அதிரடியாக கைது
விருதுநகர்: பெங்களூருவில் தலைமறைவான இளைஞருடன் தங்கியிருந்த ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த 60 வயதாகும் முதியவர் ராமர் . இவருடைய மனைவி அன்னலட்சுமி. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (65), இவருடைய மகன்கள் ராஜேந்திரன் (40), ராம்குமார் (35).

ராமர் குடும்பத்திற்கும், ராமசாமி குடும்பத்திற்கும் பணம் விவகாரத்தில் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் திருவிழா அண்மையில் நடந்தது. இந்த கோவில் திருவிழாவிற்கு ராமர் தனது குடும்பத்துடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார். அப்போது கோவிலில் சிம்ம வாகனம் தனிப்பட்ட முறையில் வைக்க வேண்டும் என ராமசாமி தரப்பினர் கேட்டிருக்கின்றனர். இதற்கு ராமரும், ஊரில் உள்ள சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராமசாமி குடும்பத்தினர் ஆத்திரம் அடைந்தனர்
இந்நிலையில் சிம்ம வாகனம் வைப்பது பற்றிய தகராறில் ராமசாமி, அவருடைய மகன்கள் ராஜேந்திரன், ராம்குமார் ஆகியோர் சேர்ந்து ராமரை கடுமையாக தாக்கினார்களாம். மேலும் அவரது மனைவி அன்னலட்சுமிக்கும் கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இந்நிலையில் இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ராமர் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக ராமரின் மனைவி அன்னலட்சுமி போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் டிஎஸ்பி முகேஷ் குமார் உத்தரவின் பெயரில் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இதற்கிடையே ராமர் கவலைக்கிடமான நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
காதலனுடன் கைதான ராமநாதபுரம் மண்டபம் இன்ஸ்பெக்டர் சத்ய ஷீலா.. அதிரடியாக சஸ்பெண்ட்.. பரபரப்பு தகவல்
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் இன்ஸ்பெக்டர் சங்கர் கண்ணன், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இதையடுத்து ராமரை அடித்து கொன்றதாக ராமசாமி, ராஜேந்திரன் ஆகிய 2 பேரை ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய ராம்குமாரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
ராம்குமாரின் செல்போன் எண்ணை தொடர்ந்து போலீசார் கண்காணித்து வந்துள்ளார்கள். அவர் பெங்களூருவில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்து சென்றனர். பெங்களூருவில் இருந்து கோவாவிற்கு ராம்குமார் தப்ப இருந்த நிலையில், அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
பெங்களூருவில் ராம்குமாருடன், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மறுவாழ்வு முகாம் மற்றும் ராமநாதபுரம் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்திய ஷீலாவும் (42) உடன் இருந்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். சத்திய ஷீலா எதற்காக ராம்குமாருடன், பெங்களூரு சென்றார். இந்த கொலைக்கும், அவருக்கும் என்ன தொடர்பு உள்ளது? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சத்திய ஷீலா விவகாரத்தில் முழு விசாரணைக்க பிறகே கருத்து கூற முடியும் என்று போலீசார் தெரிவித்தனர். கைதான 2 பேரையும் போலீசார் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் இருவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி பாரதி உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications