விவாதத்திற்கு நான் தயார்.. நீங்கள் தயாரா?... அன்புமணிக்கு, உதயநிதி சவால்
விருதுநகர்: தமிழக நலத்திட்டங்களை பற்றி பாமக இளைஞரணி தலைவர் அன்புமணியுடன் விவாதிக்க, தாம் தயார் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தீவிர அரசியலில் களம் இறங்கியுள்ள உதயநிதி ஸ்டாலின், திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அவரை வரவேற்று அக்கட்சி தொண்டர்கள் ஆரவாரம் செய்து வருகின்றனர்.
பிரச்சாரத்தில், அதிமுக கூட்டணி கட்சிகளை, சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார். நேற்று முன் தினம் தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.

அன்புமணிக்கு சவால்
இந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாமகவுடன் திமுக ஒருபோதும் கூட்டணி பற்றி பேசவில்லை என்று தெரிவித்தார். சேலத்தில் அமைக்கப்படவுள்ள 8 வழிச்சாலை திட்டம் பற்றி விவாதம் செய்ய தாம் தயார் என்றும், அதற்கு அன்புமணி ராமதாஸ் தயாரா எனவும் சவால் விடுத்தார்.

திட்டவட்டம்
கொடநாடு விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் வரையில் முதலமைச்சர் மீது குற்றச்சாட்டுகளை வைத்துகொண்டே தான் இருப்போம் என்றும் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர் செல்வத்தை மிக கடுமையாக விமர்சித்தார்.

வில்லன் மோடி
திமுக கதாநாயகனாக இருப்பதாகவும், பிரதமர் மோடி வில்லனாக இருப்பதாகவும் கூறிய உதயநிதி ஸ்டாலின், அதிமுக தற்போது அடிமையாக உள்ளதாக கூறினார். உங்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்து ஏமாற்ற வருவார்கள் என்றும், நீங்கள் ஏமாற கூடாது என்றும் பிரச்சாரம் செய்தார்.

அன்புமணி விமர்சனம்
முன்னதாக, தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாய் திறந்தாலே பொய் மட்டுமே பேசி வருகிறார் என்றும், தோல்வி பயத்தில் தனிநபர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவதாகவும் அன்புமணி கூறினார். உதயநிதி ஸ்டாலின், என்ன பேசுவதென்றே தெரியாமல் உளறுகிறார் என்றும், திமுகவில் பிரச்சாரம் செய்ய உதயநிதியை விட்டால், வேறு ஆள் இல்லையா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications