பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் பலி.. உடனே விருதுநகர் கலெக்டருக்கு போன் போட்ட ஸ்டாலின்!
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பட்டாசு ஆலை விபத்தில் 8 பேர் பலியான நிலையில், பலியானோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கீழதிருத்தங்கல்லைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த தனியார் பட்டாசு ஆலையில், 200க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். பட்டாசு ஆலையில் 50க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.

இந்த நிலையில், இன்று மதிய உணவு இடைவேளைக்கு பிறகு வழக்கம்போல் பட்டாசு தொழிலாளர்கள் தங்களது பணியை துவங்கினர். அப்போது பேன்சி ரக பட்டாசுகளை தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்து அடுத்தடுத்த அறைகளுக்கு பரவி 7க்கும் மேற்பட்ட அறைகள் சேதமடைந்தன.
இந்த வெடி விபத்தில் சிக்கி 5 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
சிவகாசி அருகே இன்று ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 8 பேர் பலியான நிலையில், பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தவும், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "சிவகாசி அருகில் உள்ள கீழத்திருத்தங்கல் கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு, மீட்பு நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.
உயிரிழந்த தொழிலாளர்களது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications