நாம் கட்சிக்காரர்கள் அல்ல! கொள்கைக்காரர்கள்! நிரந்தரமாக தமிழகத்தை ஆள்வோம்! ஸ்டாலின் தந்த உற்சாகம்!
விருதுநகர்: திமுகவினரை பொறுத்தவரை வெறுமனே கட்சிக்காரர்கள் மட்டும் அல்ல என்றும் கொள்கைக்காரர்கள் எனவும் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருக்கிறார்.
தொண்டர்களாலும், லட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் உதிரத்தாலும் உருவானவன் நான் என தன்னை உருக்கமுடன் அவர் குறிப்பிட்டார்.
கட்சிக்காரர்களை உயர்த்தி பிடித்து முதல்வர் நேற்று முப்பெரும் விழாவில் பேசியது திமுகவினருக்கு உற்சாக டானிக் கொடுத்தது போல் அமைந்திருந்தது.
இது தொடர்பாக முதல்வர் ஆற்றிய உரையில் சிறு தொகுப்பை இங்கே பார்க்கலாம்..

ஆரியம் Vs திராவிடம்
'இன்னாருக்கு கல்வியைக் கொடு - இன்னார்க்கு கொடுக்காதே! இன்னாரைக் கோயில்களில் விடு - இன்னாரை விடாதே!' - என்பது ஆரிய மாடல். உயர்ந்தவர் - தாழ்ந்தவர் எனப் பிரிப்பதுதான் ஆரிய மாடல். இதற்கு நேர் எதிரானது திராவிட மாடல். எல்லார்க்கும் கல்வியைக் கொடு - எல்லார்க்கும் வேலையைக் கொடு - எல்லார்க்கும் அதிகாரத்தைக் கொடு - ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்பதுதான் திராவிட மாடல்! ரத்த பேதம் இல்லை - பால்பேதம் இல்லை என்பதுதான் திராவிட மாடல்.

கொள்கைக்காரர்கள்
நாம் ஒரு கட்சிக்காரர்கள் அல்ல, கொள்கைக்காரர்கள் என்பதை நமக்கு நாமே உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். அதனையே ஊருக்கும் நாட்டுக்கும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். என்னை நம்பி இந்த இயக்கத்தையும், தமிழ்ச் சமுதாயத்தையும் ஒப்படைத்துச் சென்றிருக்கிறார் நம்முடைய கலைஞர் . அந்த நம்பிக்கையைக் காப்பது ஒன்றே எனது ஒரே பணி! அந்தப் பணியை உலகமே ஒப்புக்கொள்ளும் அளவுக்குச் சிறப்பாகச் நான் செய்து வருகிறேன்.

கட்சிக்காரர்களால் நான்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களான உங்களின் ஒத்துழைப்போடு - நான் செயல்பட்டு வருகிறேன். தொண்டர்களால் ஆனவன் நான். லட்சோப லட்சம் உடன்பிறப்புகளின் உதிரத்தால் உருவானவன் நான். இன்று ஆட்சியில் அமர்ந்திருப்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, தொண்டர்களில் தலைமைத் தொண்டனாக நான் அமர்ந்துள்ளேன். உடன்பிறப்புகளால் உட்கார வைக்கப்பட்டிருக்கிறேன்.

நிரந்தரமாக ஆள்வோம்
இனித் தமிழ்நாட்டை நிரந்தரமாக ஆளப் போவது கழகம்தான் என்று நான் சொல்லி வருகிறேன் என்றால், என்னை மட்டும் நம்பி அதைச் சொல்லவில்லை. ஏதோ அகங்காரம் தொனிக்கும் வகையில், அதை நான் சொல்லவில்லை! கலைஞரின் லட்சோப லட்சம் உடன்பிறப்புகள் மீது நம்பிக்கை வைத்துதான் அதை நான் சொல்கிறேன். கோட்டையில் நம்மை அமர வைக்க தொண்டர்களால் தான் முடியும் -தொண்டர்களால் மட்டுமே முடியும் - இதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன் நான். ஆட்சி இருந்தால்தான் இந்த நாட்டை வாழ்விக்க முடியும். நமது கனவுத்திட்டங்களை மக்களுக்கு உருவாக்கித் தரமுடியும், தாய்த்தமிழகத்தைக் காக்க முடியும்.












Click it and Unblock the Notifications