”வேதனையடைந்தேன்!” சிவகாசி பட்டாசு விபத்தில் ஒருவர் பலி - ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர்
சென்னை: சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கிய அரவிந்த் குமார் என்ற தொழிலாளியின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல நூற்றுக்கணக்கான சிறு குறு பட்டாசு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு இதுவே வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
ஆனால், பட்டாசி ஆலைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் பல உயிர்களை காவு வாங்கி வருகின்றன. இதனை தடுக்க தமிழ்நாடு அரசு பல்வேறு விதிகளை அறிவித்தும் விபத்துகள் தொடர்கதையாகவே உள்ளன.
இந்த நிலையில் இன்று சிவகாசி அருகே மாரனேரி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் கணேஷ்வரி என்ற பட்டாசு ஆலையில் தயாரிப்பு பணி நடைபெற்றுக்கொண்டு இருந்தபோது வெடிபொருட்களில் உராய்வு ஏற்பட்டு திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.
இதனால், பட்டாசு தயாரிக்கப்பட்டு வந்த அறை இடிந்து தரைமட்டமானது. இதில் இடிபாடுகள் சிக்கி 32 வயதான அரவிந்த் குமார் என்ற தொழிலாளி உயிரிழந்தார். இந்த நிலையில், வெடிவிபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவியையும் அறிவித்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் மாரனேரி கிராமத்தில் இன்று ஏற்பட்ட வெடிவிபத்தில் மாதன்கோவில்பட்டியைச் சேர்ந்த முப்பத்து இரண்டே வயதான அரவிந்த் என்பவர் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் மூன்று இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்." எனக்குறிப்பிட்டு உள்ளார்.