விருதுநகரில் லிஃப்ட் கேட்டு பைக்கில் ஏறிய காவலாளி.. முன்னாடி காத்திருந்த எமன்.. இப்படியும் நடக்குமா?
விருதுநகர்: விருதுநகர் அருகே நரிக்குடி பகுதியில் மனைவியை பார்க்க சென்ற நபரிடம் 72 வயது காவலாளி ஒருவர் லிஃப்ட் கேட்டு சென்றுள்ளார். இதில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானதில், காவலாளி மற்றும் எதிரே வந்த வாகனத்தில் இருந்தவர் உயிரிழந்தனர்.
மதுரை மாவட்டம் விளாங்குடியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 32). இவரது மனைவியின் ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஆகும். கண்ணன் தன் மாமியார் வீட்டில் இருக்கும் மனைவியை பார்ப்பதற்காக நேற்று மோட்டார் சைக்கிளில் அவரது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். அப்போது விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே வந்த போது நாகப்பன் என்பவர் அவரிடம் லிஃப்ட் கேட்டுள்ளார்.

நாகப்பனுக்கு சொந்த ஊர் விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள கே நெடுங்குளம் ஆகும். 72 வயதான இவர் மதுரை அண்ணாநகரில் உள்ள ஒரு நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்றும் வேலை முடிந்து பஸ்சில் நரிக்குடி வந்து இறங்கினார். அங்கிருந்து வீட்டுக்கு செல்லும் வழியில் தான் கண்ணனை பார்த்ததும் லிப்ட் கேட்டு இருக்கிறார்.
கண்ணனும் அவரை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றிருக்கிறார். நரிக்குடி-திருப்புவனம் சாலையில் இடையப்பட்டி அருகே சென்றபோது எதிரே வையம்பட்டியை சேர்ந்த காளி என்பவர் மோட்டார் சைக்கிளுடன் இவரது மோட்டார் சைக்கிள் மோதியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதில் லிஃப்ட் கேட்டு வந்த முதியவர் நாகப்பன், காளி ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு காளி இறந்துவிட்டதாக கூறினர். மற்ற இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகப்பன் உயிரிழந்தார். கண்ணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications