சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு பின்னால் இருந்தவர் கீர்த்தனா.. பலரும் அறியாத அமைச்சரின் மறுபக்கம்
விருதுநகர்: சிவகாசி தவெக எம்எல்ஏ கீர்த்தானா சம்பத் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதை நம்பவே முடியவில்லை. வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு இளமையான ஒரு அமைச்சரவையை நீங்கள் பார்க்க முடியாது என்றே நான் சொல்வேன். எங்களுக்கு இதுபோன்ற ஒரு வாய்ப்பை யாரும் வழங்கியிருக்க மாட்டார்கள்... நாங்கள் எவ்வளவு சிறப்பாக அரசாங்கத்தை நடத்த முடியும் என்பதை இந்த உலகிற்குக் காட்டப்போகிறோம்." என்று கூறினார். கீர்த்தனா சம்பத் யார் என்று இந்த பதிவில் பார்ப்போம்.
கீர்த்தனா தீவிர அரசியலில் நுழைவதற்கு முன்பு, அரசியல் ஆலோசகராகவும் டிஜிட்டல் பிரச்சார உத்தியாளராகவும் பணியாற்றியவர். கீர்த்தனா 'Showtime Consulting' என்ற அரசியல் ஆலோசனை நிறுவனத்தில் பணியாற்றியபோது, ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சிக்காக பல்வேறு தேர்தல் பிரச்சார உத்திகளை வகுப்பதில் முக்கிய பங்காற்றினார். குறிப்பாக டிஜிட்டல் தளங்களில் அக்கட்சியின் செல்வாக்கை உயர்த்த தீவிரமாக உழைத்தார். சந்திரபாபு நாயுடு முதல்வராக உழைத்தவரை, அடையாளம் கண்டு தனது தவெகவில் இணைய அழைத்தார் விஜய்.

இதனிடையே அரசியல் வியூகங்களை வகுத்துக் கொடுத்த கீர்த்தனா, பின்னாளில் நேரடியாகக் களமிறங்க முடிவு செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு, தனது 30 வயதிலேயே வெற்றி பெற்று முதல்முறையாக எம்எல்ஏ ஆகி உள்ளார்.
தற்போது முதலமைச்சர் ஜோசப் விஜய் அமைச்சரவையில் அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றுள்ளார். அரசியல் களத்தில் வியூகங்களை வகுத்துக் கொடுத்த ஒருவர், இன்று அதே களத்தில் அமைச்சராகப் பொறுப்பேற்பது பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதுபற்றி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கருத்து தெரிவித்த தவெக எம்எல்ஏ கீர்த்தானா, " "எல்லாம் மாறப்போகிறது, அந்த மாற்றம் இதோ வந்துவிட்டது. தளபதி முதலமைச்சர் ஜோசப் விஜய் இங்கே இருக்கிறார்... ஒரு நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்து, வேட்பாளராக வாய்ப்பு பெற்று, இன்று அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருப்பது என்பது வேறு எந்த மாநிலத்திலாவது எளிதான காரியமா? இல்லை.
அவர் (விஜய்) திறமையை பார்க்கிறார், ஆற்றலை பார்க்கிறார்; அந்த மாற்றங்கள் அனைத்தையும் கொண்டு வர நாங்கள் இங்கே இருக்கிறோம். இந்த அரசாங்கம் 35 முதல் 50 ஆண்டுகள் வரை நீடிக்கும். மிக நீண்ட காலம் நீடிக்கப்போகும் அரசாங்கமாக நாங்கள் இருக்கப்போகிறோம்..."
முன்னதாக தேர்தல் முடிவு வந்த அன்று இந்தியில் பேசியதற்காக தேசிய அளவில் கீர்த்தனா பேசுபொருளானார். அதேபோல் தெலுங்கில் பேசியதற்காகவும் திகைப்புடன் பார்க்கப்பட்டார். எனினும் இந்தியில் பேசியதற்காக அவர் மீது விமர்சனங்களும் எழுந்தன. இதுபற்றி கருத்து தெரிவித்த கீர்த்தனா, எனது கட்சியின் பிரதிநிதித்துவத்தை இந்தியா மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் பரப்ப விரும்புகிறேன். விஜய்யை பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நான் ஒரு உதாரணம் மட்டும் தான்.. அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும்.. அனைவரும் அரசியலில் இணைய வேண்டும் என்பதே என் விருப்பம் என்றார் .
அமைச்சர் கீர்த்தனா, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரியில் கணிதத்தில் இளநிலைப் பட்டமும், புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் புள்ளி விவரத்துறையில் முதுகலைப்பட்டம் பெற்றவர் ஆவார்.














Click it and Unblock the Notifications