லைம்லைட்டுக்கு வந்த ராஜேந்திர பாலாஜி.. மீண்டும் ஸ்டாலினை போட்டு தாக்கி.. பரபரத்த விருதுநகர்
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து மீண்டும் பேசியுள்ளார் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர்: ஏன்தான் திமுகவுக்கு ஓட்டு போட்டோமோ என்று மக்கள் வெட்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆளும் கட்சியை விமர்சித்துள்ளார்.
கோர்ட், வழக்கு, ஜாமீன் என அனைத்து பரபரப்புகளும் ஓரளவு தணிந்த நிலையில் மீண்டும், லைம்லைட்டுக்கு வந்துள்ளார் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.
கடந்த ஆட்சியில், திமுகவையும், முக ஸ்டாலினையும் அளவுக்கு அதிகமாகவே விமர்சித்தவர் இவராகத்தான் இருக்க முடியும்.. ஒருகட்டத்தில் எல்லைமீறி, ஒருமையில் ஸ்டாலினை திட்டிய வீடியோக்கள் அத்தனையும் யூடியூபில் வைரலாகின.

தண்டனை
சிறிது மாத கால இடைவெளிக்குபிறகு, விருதுநகர் மாவட்ட அதிமுக சூடுபிடித்துள்ளது.. விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர், நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ஆலோசனைக் கூட்டம் விருதுநகரில் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது... அப்போது பேசிய ராஜேந்திர பாலாஜி மறுபடியும் திமுகவையும், ஸ்டாலினையும் சரமாரியாக விமர்சித்து, புகார்களை கூற ஆரம்பித்தார்.

ஜனநாயகம்
"ஜனநாயக முறைப்படி அதிமுகவில் கழக அமைப்பு தேர்தல் நடக்கிறது.. திமுக ஆட்சியில் மக்கள் பல தொல்லைகளை அனுபவித்து வருகின்றனர்... அதற்கு மத்திய அரசைக் குறை சொல்லியே, காலம் கடத்தும் முயற்சியில் அக்கட்சியினர் ஈடுபடுகின்றனர்... இந்தக் குற்றச்சாட்டைத் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். மின்வெட்டு பிரச்சனையில் திமுக அரசு திணறுகிறது...

மின்வெட்டு
திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் விலைவாசி உயர்கிறது... மின்வெட்டு வாடிக்கையாகி விடுகிறது. திமுகவுக்கு வாக்களித்ததற்குப் பொதுமக்கள் தற்போது வேதனைப்படுகின்றனர். வெட்கப்படுகின்றனர். திமுக அரசு விரைவில் முடிவுக்கு வரும். திமுகவால் அதிமுகவை அசைத்துப் பார்க்கமுடியாது. அடுத்து, நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என எந்தத் தேர்தல் வந்தாலும் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

விருதுநகர்
தமிழகத்தில் அதிமுக தான் இன்று ஆளுங்கட்சியாக மக்கள் பணியாற்றுகிறது... வருகின்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்க வேண்டும்.. என்னையும், கழக நிர்வாகிகளையும் போட்டியின்றி தேர்வு செய்த அனைத்து நிர்வாகிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.. ராஜேந்திர பாலாஜி மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ள நிலையில், விருதுநகர் அதிமுக உற்சாகத்தில் உள்ளது.












Click it and Unblock the Notifications