கொதிக்கிற நெய்யில் கையை விட்டு அப்பம் சுட்டு.. வியப்பில் விருதுநகர்.. சிலிர்த்த ஸ்ரீவில்லிப்புத்தூர்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலில், 96 வயது பாட்டி, வெறும் கையால் அப்பத்தை சுட்டு எடுத்தார்.. இந்த வீடியோ தான் நேற்றிரவு முதல் இணையத்தில் வெளியாகி பக்தர்களுக்கு வியப்பையும், பரவசத்தையும் ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
நேற்று மகாசிவராத்திரியை முன்னிட்டு மாநிலம் முழுவதுமுள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.. எப்போதுமே சிவராத்திரிகளில், ஓரிரு இடங்களில் விநோத வழிபாடும் நடைபெறுவது வழக்கமாகும்.

பணியாரம் சுட்டு எடுக்கும் வழிபாடு
அந்த வகையில் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் பத்ர காளியம்மன் கோவிலில், வெறும் கையை கொதிக்கும் நெய்யில் விட்டு பணியாரம் சுட்டு எடுக்கும் வழிபாடு நடைபெறும். இந்த கோவிலில் கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகவே, சிவராத்தியின் நள்ளிரவில் இந்த அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
இதற்காகவே, மகாசிவராத்திரி இரவு அன்று 10 மணி முதலே கோவிலில் பக்தர்கள் கூட ஆரம்பித்துவிடுவார்கள்.. இரவு 11 மணி முதல் அதற்கான வேலைகளும் ஆரம்பமாகும். பிறகு 12 மணிக்கு மேல், காளியம்மன் சந்நிதி முன்பு புதிய மண் அடுப்பு வைத்து அதில் நெய் ஊற்றி, கோவிலை சேர்ந்த பூசாரிகளுடன் அப்பம் சுடும் நிகழ்ச்சி ஆரம்பமாகும்.
கொதிக்கும் நெய்
முத்தம்மாள் என்கிற 96 வயது பாட்டிதான், அடுப்புக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, கொதிக்கும் நெய்யில் கையை விட்டு பணியாரம் சுட்டு எடுப்பார்.. முத்தம்மாள் பாட்டி சுட்டு தரும் பணியாரத்தை, அருகிலுள்ள பனையோலை பெட்டியில் அங்கிருப்பவர்கள் வாங்கி போடுவார்கள்.
இந்த நிகழ்வை, அங்கு கூடியிருக்கும் பக்தர்கள் பயபக்தியுடன் வணங்குவார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த பக்தர்களுக்கும், பாட்டி முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் கைவிட்டு, அந்த எண்ணெயையே பக்தர்களுக்கு நெற்றியில் விபூதியாக பூசி விடுவார். பாட்டியிடம் எண்ணெய் வாங்குவதற்காகவே பக்தர்கள் குவிந்துவிடுவார்கள்.
சிவராத்திரியில் குவிந்த பக்தர்கள்
அப்படித்தான் நேற்றைய தினமும், ஸ்ரீவில்லிப்புத்தூர் முதலியார் பட்டித் தெருவிலுள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது.. அந்த கோவில் வளாகத்தில் அந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் பாட்டியும், கோவில் பூசாரிகளும் எரியும் விறகு அடுப்பில் நெய்யை கொதிக்கவிட்டு, அதில் பனைவெல்லம் கலந்த அரிசி மாவினால் செய்யப்பட்ட அப்பங்களை, கொதிக்கும் நெய்யில் போட்டு கரண்டி இல்லாமல் வெறும் கையால் அப்பத்தை எடுக்க துவங்கினார்..
முத்தம்மாள் பாட்டி
இதை ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரண்டு நின்று ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். நேற்று இரவு ஆரம்பித்த இந்த அப்பம் சுடும் நிகழ்வு, இன்று அதிகாலை வரை நடந்தது..
முத்தம்மாள் பாட்டி, கடந்த 52 வருடங்களாகவே, இப்படி மகா சிவராத்திரிகளில் அப்பம் சுட்டு வருகிறார். இதற்காக 40 நாட்களாக விரதம் இருந்து அப்பம் சுடுவாராம். வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் பாட்டி சுட்ட அப்பம் வீடியோதான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications