எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி சரி..நீட் விலக்கு சொன்னீங்களா.. பேனாவை காணோமா? ராஜேந்திர பாலாஜி கேள்வி
விருதுநகர்: அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாள் சமயத்தில் அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டும் அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த செப்.15இல் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாவின் உருவப் படத்திற்கு அதிமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெத்த தாயை இழிவா பேசிட்டாரு.. பாஜகவே விட்டாலும் ஆ.ராசாவை விடாத அதிமுக! செல்லூருக்கு வந்துச்சே கோபம்
ராஜேந்திர பாலாஜி
அதன்படி பேரறிஞர் அண்ணாவின் 114வது பிறந்த தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பாக விருதுநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பாக விருதுநகர் பழைய பேருந்து நிலையம் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர் திமுக அரசை மிகக் கடுமையாக விமர்சித்தார்.
மக்கள் நலனில் அக்கறை இல்லை
இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, "அண்ணாவின் பெயரை திமுகவினர் குப்பையில் போட்டுவிட்டார்கள். அண்ணாவின் புகழையும் குப்பையில் போட்டுவிட்டார்கள். கருணாநிதி தன்னுடைய குடும்பம் வாழ்வதற்காகவே திமுகவைப் பயன்படுத்திக் கொண்டார். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலினும் கூட தனக்கு வாக்களித்த மக்கள் குறித்துச் சிந்திக்கவில்லை.
திருமண உதவித் தொகை
கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக கொண்டு வந்து பல்வேறு திட்டங்களை திமுக அரசு முடக்கி உள்ளது. திருமண உதவித்தொகை உள்ளிட்ட பல முக்கிய திட்டங்களை அவர்கள் கைவிட்டுவிட்டனர். திமுக அரசு விடியல் அரசு இல்லை என்றுமே விடியாத அரசு.. பொதுமக்கள் நலன் குறித்த ஆட்சி இல்லை. மாறாக எதிர்த்து எதாவது பேசினாலே சிறைச்சாலை செல்ல வேண்டிய சூழல் தான் இங்கு உள்ளது.
கலப்படம்
இனி எப்போதும் திமுக தான் ஆட்சியில் இருக்கும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டதாகவே தெரிகிறது. நாங்கள் ஆட்சியில் இருந்த போதும் அப்படித்தான் நினைத்தோம். ஆனால் ஆட்சியும் காட்சியும் மாறும்... அடுத்த தேர்தல் நெருங்குகிறது. இன்னும் ஒரே ஆண்டில் அனைத்தும் மாறும். ஆவின் பாலில் தரம் இப்போது பெரியளவில் குறைந்துவிட்டது. அனைத்து ஆவின் பொருட்களிலும் கலப்படமும் அதிகரித்துவிட்டது
விளம்பரம்
அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக எந்த கட்டணமும் உயர்த்தப்படவில்லை. ஆனால் திமுக ஆட்சியில் 1.5 ஆண்டுகளிலேயே கட்டணங்களை உயர்த்தி உள்ளனர். முதல்வர் ஸ்டாலினைச் சுற்றி பெரிய கூட்டமே உள்ளது. இதனால் அவரால் செயல்படவே முடியவில்லை. இப்போதெல்லாம் முதல்வருக்காகத் தினசரி நான்கு சூட்டிங் நடப்பதாகக் கூறுகிறார்கள். அரசு மக்கள் திட்டங்கள் எதையும் செயல்படுத்துவதாக தெரியவில்லை.
எழுதாத பேனா
தற்போதைய முதல்வருக்கு விளம்பரத்தில் மட்டுமே அதிக ஆர்வம் உள்ளது. விளம்பரத்தால் உயர்ந்தவர் வாழ்க்கை நிரந்தரமாகாது. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்து நீட் தான் என்றார்கள். ஏன் இன்னும் அந்த கையெழுத்தைப் போடவில்லை? கையெழுத்துப் போட போனா இல்லையா? கருணாநிதிக்குப் பேனா நினைவுச்சின்னம் அமைக்கிறார்கள். இதற்கு 80 கோடி ரூபாய் ஒதுக்குகிறார்கள். எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி ஒதுக்கும் திமுக அரசு, இந்த நீட் தேர்விற்கு விலக்கு பெற ஏன் முயற்சி எடுக்கவில்லை" என்று கடுமையாகச் சாடி பேசினார்.