குரூப் 4 தேர்வில் வென்ற மனிஷாஸ்ரீ.. வேலை கிடைத்து ரயிலில் ஊர் திரும்பிய போது நடந்த பெரும் சோகம்!
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று பணி கிடைத்த மகிழ்ச்சியில் சொந்த ஊர் திரும்பிய மனிஷாஸ்ரீ (23), ரயில் படிக்கட்டில் காற்று வாங்கி கொண்டிருந்த போது திடீரென தவறி விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் நடந்த போது உடன் வந்திருந்த தந்தை மற்றும் மாமாவுக்கே உடனே தெரியாமல் போனது தான் பெரும் சோகம். நீண்ட நேரத்திற்கு பிறகே அவர்களுக்கு தெரியவந்தது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த குருநாதன் (54) என்பவரது மகள் மனிஷாஸ்ரீ. 23 வயதாகும் இவர் அண்மையில் நடந்த குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து சென்னையில் கவுன்சில் நடந்துள்ளது.இந்த கவுன்சிலிங்கில் கலந்து கொள்வதற்காக தனது தந்தை குருநாதன் மற்றும் மாமா (அக்காவின் கணவர்) அய்யனார் (34) ஆகியோருடன் சென்னை சென்றிருக்கிறார். அங்கு மனிஷாஸ்ரீக்கு ஊரக மருந்தவத்துறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரயில்
பணி கிடைத்த மகிழ்ச்சியில் செவ்வாய்கிழமை மாலை சென்னை - செங்கோட்டை சிறப்பு ரயிலில் ஏறி பயணம் செய்து வந்துள்ளார். சிறப்பு ரயில் இன்று (புதன்கிழமை) அதிகாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கோப்பையநாயக்கர்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது மனிஷாஸ்ரீ தனது இருக்கையில் இருந்து எழுந்து காற்று வாங்குவதற்காக படிக்கட்டு அருகே வந்து நின்றுள்ளார்.

தெரியவில்லை
அப்போது எதிர்பாராத விதமாக ரயிலிலிருந்து தவறி விழுந்துள்ளார். மனிஷா ஸ்ரீ விழுந்தது தெரியாமல் தந்தை குருநாதன் மற்றும் மாமா அய்யனார் ஆகியோர் ரயிலில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இவர் தவறி விழுந்தது அவர்களுக்கு தெரியாது. சங்கரன்கோவில் வந்தவுடன் தூங்கி எழுந்தவர்கள் மனிஷா ஸ்ரீ தேடியுள்ளனர்.

பிணம் கிடைத்தது
மனிஷா ஸ்ரீ இல்லாததால் அதிர்ச்சி அடைந்த தந்தை குருநாதன் மற்றும் மாமா அய்யானார் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் தண்டவாள பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது கோப்பையைநாயக்கர் பட்டி அருகே உள்ள தண்டவாள பகுதியில் மனிஷாஸ்ரீ பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

போலீசார்
இதைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் ரயில்வே போலீசார் தவறி விழுந்து இறந்து கிடந்த மனிஷாஸ்ரீ உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார்கள். இதுகுறித்து ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் விஜயன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். குரூப் 4-ல் வேலை கிடைத்துத் திரும்பியபோது மனிஷா ஸ்ரீ ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications