கர்ப்பிணிக்கு WFH மறுப்பு! குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் அமெரிக்க நிறுவனத்திற்கு ₹188 கோடி அபராதம்!
வாஷிங்டன்: தொழிலாளர்களை பிழிந்து எடுப்பதில் அமெரிக்க நிறுவனங்கள் கை தேர்ந்தவை. அப்படித்தான் நிறுவனம் ஒன்று, தொழிலாளரை சிறப்பாக வேலை வாங்குகிறேன் என்று கூறி, சுமார் ரூ.188 கோடி அபராதத்தில் சிக்கியிருக்கிறது.
ஓஹியோவில் உள்ள ஒரு நிறுவனம், கருவுற்றிருந்த ஊழியருக்கு வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி மறுத்ததால், அவரது குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் 22.5 மில்லியன் டாலர் (சுமார் ₹188 கோடி) அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

குழந்தை பலி
செல்சி வால்ஷ் என்ற பெண் Total Quality Logistics (TQL) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். 2021-ல் அவர் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு ஒரு மருத்துவ அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அவர் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும், வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர் அறிவுறுத்தினார்.
நிறுவனத்தின் பிடிவாதம்
செல்சி தனது மருத்துவ சான்றிதழுடன் WFH கோரிக்கை விடுத்தார். ஆனால், நிறுவனம் அதை நிராகரித்தது. அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டும். இல்லையெனில் சம்பளம் மற்றும் மருத்துவக் காப்பீடு இல்லாத விடுப்பில் செல்ல வேண்டும் என்று கட் அன்ட் ரைட்டாக சொல்லிவிட்டது. வருமான இழப்பு மற்றும் காப்பீடு ரத்தாகும் என்ற பயத்தில், மருத்துவரின் எச்சரிக்கையை மீறி செல்சி அலுவலகம் சென்றார். இதுதான் அவர் செய்த பெரிய தவறு.
குழந்தைக்கு நேர்ந்த சோகம்
பிப்ரவரி 22 முதல் 24 வரை மூன்று நாட்கள் அலுவலகம் சென்று வேலை செய்தார். பிப்ரவரி 24 மாலை அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டு, 18 வாரங்களுக்கு முன்னதாகவே ஒரு பெண் குழந்தை பிறந்தது. மேக்னோலியா என்று பெயரிடப்பட்ட அந்த குழந்தை பிறந்த ஒரு மணிநேரம் 30 நிமிடங்களிலேயே உயிரிழந்தது. சோகம் என்னவென்றால், அவர் பிரசவ வலி ஏற்படுவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்புதான் நிறுவனம் அவரது WFH கோரிக்கையை ஏற்றுக்கொண்டது.
அபராதம் விதித்த நீதிமன்றம்
குழந்தையின் மரணத்திற்கு நிறுவனத்தின் அலட்சியமே காரணம் என்று செல்சி தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. ஓஹியோவின் ஹாமில்டன் கவுண்டி நீதிமன்ற நீதிபதிகள், கர்ப்பிணியின் நியாயமான கோரிக்கையை நிராகரித்தது தவறான செயல் என்று தீர்ப்பளித்தனர். மட்டுமல்லாது இதற்காக அபராதத்தையும் விதித்தனர்.
முதலில் 25 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க பரிந்துரைக்கப்பட்டது. இதில் 90 சதவீதத் தவறு நிறுவனத்தினுடையது என்று தீர்மானிக்கப்பட்டு, 22.5 மில்லியன் டாலர் (சுமார் ₹188 கோடி) அபராதமாக இறுதி செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications